Last Updated : 07 Oct, 2017 08:26 AM

 

Published : 07 Oct 2017 08:26 AM
Last Updated : 07 Oct 2017 08:26 AM

மகாத்மா காந்தி கொலையில் சர்ச்சை: நீதிமன்றத்துக்கு உதவ வழக்கறிஞர் நியமனம்

மகாத்மா காந்தியை சுட்ட சம்பவத்தில் சந்தேகம் எழுப்பி தொடரப்பட்ட வழக்கை விசாரிப்பதா, வேண்டாமா என்பது குறித்து முடிவெடுப்பதில் நீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்கறிஞரை நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசத் தந்தை மகாத்மா காந்தி 30.1.1948 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி, மும்பையைச் சேர்ந்த ‘அபினவ் பாரத்’ அமைப்பின் அறங்காவலர் டாக்டர் பங்கஜ் குமுத்சந்த் பத்னிஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், காந்தி சுடப்பட்டபோது அவரை நோக்கி 4 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. ஆனால், கோட்சே சுட்டது 3 குண்டுகள்தான். நான்காவது குண்டு எங்கிருந்து வந்தது என்பது குறித்து முறையாக விசாரிக்கப்படவில்லை. அந்த நான்காவது குண்டுதான் காந்தி உயிரிழக்க காரணமாக அமைந்தது. இதில் வெளிநாட்டு சதி அடங்கியுள்ளது. இதுகுறித்து மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, எல்.நாகேஸ்வரராவ் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் அமெரிக்க தூதரகத்தில் இருந்து அனுப்பப்பட்ட தந்தி ஆதாரங்களை சமர்ப்பித்து, எழுத்துமூலம் தாக்கல் செய்யப்பட்ட வாதத்தில், ‘காந்தி கொலை வழக்கு உலக வரலாற்றில் ஒரு மிகப்பெரிய சதி. காந்தியை சுட்டுக் கொன்ற வழக்கில் கோட்சே தவிர மற்றொருவர் சம்பந்தப்பட்டுள்ளார். வெளிநாட்டு அமைப்புக்கு தொடர்புள்ளது. 30.1.1948 அன்று இரவு 8 மணிக்கு அமெரிக்க தூதரகம் அனுப்பியுள்ள தந்தியில், காந்தி சுடப்பட்டபோது 5 அடி தூரத்தில் தூதரக அதிகாரியான ஹெர்பர்ட் டாம் ரெய்னர் என்பவர் இருந்தார் என்றும், இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் உதவியுடன் அவர் கொலையாளியை பிடித்துக் கொடுத்த விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரி அன்றிரவு தூதரகத்துக்கு திரும்பியதும் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கை 70 ஆண்டுகள் கடந்த நிலையிலும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தகவல் சுதந்திர சட்டம்(எப்ஓஐஏ)-ன் படி அந்த அறிக்கை விவரங்களை தெரிவிக்கும்படி நான் விண்ணப்பித்துள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், எந்த அமைப்பையும் குற்றவாளி யாக தண்டிக்க முடியாது. மூன்றாவது நபர் சம்பந்தப்பட்டிருந்தால், அவர் தற்போது விசாரணையை சந்திக்க உயிரோடு இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பினர். மேலும், ஏற்கெனவே முடிவான வழக்கில் இப்போது சட்டரீதியாக என்ன செய்ய முடியும்? அரசியல்ரீதியாக நாங்கள் பார்க்க விரும்பவில்லை. சட்டரீதியாக என்ன செய்ய முடியும் என்பதை மட்டுமே நீதிமன்றம் ஆராயும் என்று தெரிவித்தனர். இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவும்படி மூத்த வழக்கறிஞரும் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான அமரேந்திர சரணுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை பரிசீலித்து இதில் சட்டரீதியாக என்ன செய்ய முடியும் என்று நீதிமன்றம் முடிவெடுக்க உதவும்படி அவருக்கு உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணை வரும் 30-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x