Published : 09 May 2023 07:29 AM
Last Updated : 09 May 2023 07:29 AM

மணிப்பூர் கலவரத்தால் இடம்பெயர்ந்தவர்கள் நிலை என்ன? - மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

கோப்புப்படம்

புதுடெல்லி: மணிப்பூர் நிலவரம் குறித்து உச்ச நீதிமன்றம் நேற்று கவலை தெரிவித்தது. வன்முறையால் இடம் பெயர்ந்தவர்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பியது.

மணிப்பூரில் 53 சதவீத மக்கள் தொகை கொண்ட மேதே சமூகத்தினர் பழங்குடியினர் அந்தஸ்து கோருவதற்கு எதிராக நடைபெற்ற பேரணியை தொடர்ந்து, மாநிலத்தின் 10 மாவட்டங்களில் கடந்த புதன்கிழமை வன்முறை வெடித்தது.

கலவரம் மற்றும் தீ வைப்பு சம்பவங்களில் 54 பேர் உயிரிழந்தனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் நாசமாகின. நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். இந்நிலையில் மணிப்பூர் கலவரம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி கூறியதாவது:

மணிப்பூரில் வன்முறை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் உடைமை இழப்புகள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். மக்களின் பாதுகாப்பு, மீட்பு மற்றும் மறுவாழ்வுதான் எங்களின் உடனடி இலக்கு. கலவரத்தால் இடம் பெயர்ந்தவர்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு அழைத்து வரப்பட வேண்டும். மத வழிபாட்டுத் தலங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். இது ஒரு மனிதாபிமானப் பிரச்சினை. அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. மனுதாரர் தனது கவலைகளை பொருத்தமான முறையில் முறையிடலாம். இதனால் இந்த விசாரணை ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் மற்றொரு களமாக மாறாது.

இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார். மத்திய, மாநில அரசுகள் சார் பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடும்போது, “மணிப்பூரில் வன்முறை காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை தளர்த்தப்பட்டது. மாநிலத்தில் கடந்த 2 நாட்களில் வன்முறைச் சம்பங்கள் எதுவும் நிகழவில்லை. அமைதிக் கூட்டம் நடத்தப்பட்டது, ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கப்படுகின்றன” என்றார்.

இதையடுத்து விசாரணை வரும் 17-ம் தேதிக்கு ஒத்திவைக் கப்பட்டது. அப்போது மணிப்பூர் நிலவரம் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x