Published : 26 Sep 2017 09:17 AM
Last Updated : 26 Sep 2017 09:17 AM
“சமாஜ்வாதி கட்சியில் பிளவு ஏதுமில்லை. புதிய கட்சி தொடங்கும் திட்டமில்லை” என்று அக் கட்சியின் நிறுவனரும் மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவ் கூறினார்.
உ.பி. தலைநகர் லக்னோவில் கடந்த ஜனவரி 1-ம் தேதி நடைபெற்ற சமாஜ்வாதி கட்சியின் தேசிய மாநாட்டில் கட்சித் தலைவர் பதவியை முலாயமிடம் இருந்து அவரது மகனும் அப்போதைய உ.பி. முதல்வருமான அகிலேஷ் சிங் பறித்தார். இதையடுத்து சமாஜ்வாதி மூத்த தலைவர்கள் முலாயம், அவரது தம்பி சிவபால் யாதவ் ஆகிய இருவரும் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டனர். இந்நிலையில் முலாயம் புதிய கட்சி தொடங்கலாம் என அரசியல் வட்டாரத்தில் ஊகங்கள் எழுந்தன. இந்நிலையில் முலாயம் நேற்று கூறியதாவது:
சமாஜ்வாதியில் பிளவு ஏதுமில்லை. புதிய கட்சி தொடங்கும் திட்டமும் இல்லை. அகிலேஷ் முடிவுகளை நான் ஏற்காவிட்டாலும் எனது மகன் என்பதால் எனது ஆசிர்வாதங்கள் உண்டு. தந்தை - மகன் இடையே கருத்து வேறுபாடு எவ்வளவு காலம் நீடிக்கும் என்று கூறமுடியாது.
கட்சித் தலைவர் பதவியை 3 மாதங்களுக்கு பிறகு என்னிடம் ஒப்படைப்பேன் என அகிலேஷ் கூறினார். ஆனால் அவர் ஒப்படைக்கவில்லை. சொன்ன வார்த்தைகளைக் காப்பாற்றாத யாரும் வெற்றி பெறமுடியாது. தந்தையுடன் இணைந்து பணியாற்ற முடியாத அவரிடம் யாரும் நிலைத்திருக்க மாட்டார்கள். நான் அகிலேஷ் பக்கமும் இல்லை. சிவபால் பக்கமும் இல்லை. சமாஜ்வாதியினர் பக்கம் இருக்கிறேன். அதிருப்தி தலைவர்களை போலி சமாஜ்வாதிகள் என்று அகிலேஷ் கூறியிருந்தால் அவர் யாரை சொல்கிறார் என்று அவர்தான் கூற வேண்டும்.
இவ்வாறு முலாயம் கூறினார்.
முலாயம் மேலும் கூறும்போது, “தற்போதைய சூழலில் மக்களின் முதுகெலும்பை உடைக்கும் அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை பாஜக கடந்த 3 ஆண்டுகளில் நிறைவேற்றவில்லை. அக்கட்சிக்கு எதிராக ஒத்த கருத்துள்ள கட்சிகள் ஒன்று திரள வேண்டும்” என்றார்.
அகிலேஷ் வாழ்த்து
முலாயம் செய்தியாளர்களை சந்தித்த பிறகு அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில், “நேதாஜி (முலாயம்) வாழ்க! சமாஜ்வாதி கட்சி வாழ்க!” என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT