Published : 23 Apr 2023 06:57 PM
Last Updated : 23 Apr 2023 06:57 PM

அடுத்த வாரம் வெப்ப அலை இல்லை; மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

புதுடெல்லி: அடுத்த ஐந்து நாட்களுக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப அலைக்கு வாய்ப்பில்லை. மாறாக அடுத்த வாரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) மழைக்கு வாய்ப்புள்ள மாநிலங்கள் குறித்து மண்டல வாரியாக இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் கூறியுள்ளவதாது:

மேற்கு வங்கம், ஒடிசா, சத்தீஸ்கர், அசாம் உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கத்திய காற்றின் தன்மை காரணமாக சுட்டெரிக்கும் வெப்ப நிலை சற்றே குறையும். இது வெப்பநிலையை 40 ° C வரம்பிற்கு கீழ் வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் வாரத்தில் மழை பெய்யும் மாநிலங்கள்:

கிழக்கு இந்தியா: வடக்கு மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மலைப்பாங்கான இடங்களில் கடும் காற்றுடன் மழை பெய்யும். மேலும், ஒடிசாவில் இன்றும், நாளையும் கடும் காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்றும், இன்று ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், பிஹாரில் நாளை (திங்கள்கிழமை) கடும் மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு இந்தியா: அடுத்த இரண்டு நாட்களில் வடகிழக்கு பகுதியில் இடியுடன் கூடிய மழை, பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், அதன் பிறகு படிப்படியாக மழை குறையும். அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய இந்தியா: அடுத்த ஐந்து நாட்களுக்கு, மத்தியப் பிரதேசம், விதர்பா மற்றும் சத்தீஸ்கரின் கிழக்குப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, சத்தீஸ்கரில் திங்கள்கிழமை வரை மழை பெய்யக்கூடும், அதே நேரத்தில் மகாராஷ்டிராவில் உள்ள விதர்பா பகுதியில் அடுத்த இரண்டு நாட்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் இந்தியா: இன்று, கடலோர ஆந்திரா, ஏனாம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கேரளா மற்றும் மாஹேவில் திங்கள்கிழமை வரை இந்த மழை நீடிக்கும். கடலோர ஆந்திரா, ஏனாம், தெலுங்கானா ஆகிய பகுதிகளிலும் நாளை ஆலங்கட்டி மழை பெய்யும். இது தவிர, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்கள், கர்நாடகாவின் உள்பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும். இத்துடன் தென்னிந்தியாவின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு இந்தியா: மத்திய மகாராஷ்டிரா மற்றும் மராத்வாடா பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களில் ஒருசில இடங்களில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது, குஜராத்தில் புதன் மற்றும் வியாழன் அன்று இதே அளவிலான மழை பெய்யக்கூடும்.

வடமேற்கு இந்தியா: அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு ராஜஸ்தான் தவிர மற்ற பகுதிகளில் லேசான, இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x