Published : 18 Sep 2017 07:23 PM
Last Updated : 18 Sep 2017 07:23 PM
ரோஹிங்கிய முஸ்லிம்கள் சட்டவிரோதக் குடியேறிகள், இவர்கள் தொடர்ந்து நாட்டில் இருந்தால் ‘தேசப்பாதுகாப்பு விவகாரத்தில் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தும்’ என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இது குறித்து உச்ச நீதிமன்ற பதிவேட்டில் ஏறிய பிரமாணப்பத்திரத்தில், நாட்டின் எந்தவொரு பகுதியிலும் குடியிருக்கும் உரிமை நாட்டின் குடிமக்களுக்கே உரித்தானது. சட்ட விரோதமாகக் குடியேறிய அகதிகள் இது குறித்து உச்ச நீதிமன்றத்தின் சட்ட எல்லையை தங்களுக்குச் சாதகமாக மாற்றி உரிமையை வலுக்கட்டாயமாக்க முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
முன்னதாக, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உதவி சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் அறிக்கையை பரிசீலித்தது, இவர் மத்திய அரசு சார்பாக ஆஜரானவர். இதனையடுத்து ரோஹிங்கியர்களை நாடுகடத்துவதற்கு எதிரான பொதுநல மனுவின் மீதான விசாரணையை அக்டோபர் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.
“ரோஹிங்கியர்களின் சட்ட விரோத குடியேற்றத்தை நாட்டிற்குள் தொடர்ந்து அனுமதித்தால் அது முழுதும் சட்ட விரோதம் என்பதோடு நாட்டின் பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கும்” என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேவைப்பட்டால் என்னமாதிரியான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளன என்பதை சீலிடப்பட்ட உறையிலும் அளிக்கத்தயார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் அகதிகளின் நிலை, 1951, மற்றும் அகதிகள் நிலை குறித்த உடன்படிக்கை 1967 ஆகியவற்றில் இந்தியா கையெழுத்திடவில்லை என்பதால் அகதிகளை வெளியேற்றக்கூடாது என்ற அதன் தீர்மானங்கள் இந்தியாவுக்குப் பொருந்தாது என்று மத்திய அரசு வாதிட்டுள்ளது. ஆனால் மனு செய்த ரோஹிங்கியர்களோ இந்திய அரசு அந்த உடன்படிக்கையில் உள்ளது என்று தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT