Published : 19 Apr 2023 04:02 AM
Last Updated : 19 Apr 2023 04:02 AM

லண்டனில் உள்ள இந்திய தூதரக வன்முறை வழக்கு - என்ஐஏ விசாரணை தொடங்கியது

புதுடெல்லி: லண்டனில் இந்திய தூதரகத்தில் நடந்த வன்முறை தொடர்பாக டெல்லியில் பதிவு செய்யப்பட்ட வழக்கை என்ஐஏ விசாரணைக்கு ஏற்றுள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு கடந்தமார்ச் 19-ம் தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். பஞ்சாபில்பிரிவினைவாதி அம்ரித் பால் சிங்குக்கு எதிரான காவல் துறை நடவடிக்கையை கண்டித்து இப்போராட்டம் நடந்தது.அப்போது தூதரகத்தில் பறந்த தேசியக் கொடியை போராட்டக்காரர்கள் கீழே இறக்கி அவமரியாதை செய்தனர். தூதரகத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் 2 அதிகாரிகள் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரக அதிகாரியை அழைத்து எதிர்ப்பை பதிவு செய்தது. இதையடுத்து, இந்திய தூதரகத்தின் பாதுகாப்பை தீவிரமாக எடுத்துக்கொள்வதாக இங்கிலாந்து அரசு உறுதி அளித்தது.

இந்த சம்பவம் குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி காவல் துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது.

இதன் பேரில் சம்பவத்தின்போது இருந்த தூதரக அதிகாரி அளித்த புகாரின் பேரில் கடந்த மார்ச் 23-ம்தேதி டெல்லியில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை டெல்லி காவல் துறை பரிந்துரையின் பேரில் கடந்த 13-ம் தேதி என்ஐஏ வசம் உள்துறை அமைச்சகம் ஒப்படைத்தது.

இந்நிலையில் வழக்கு விசாரணையை என்ஐஏ தொடங்கியுள்ளது.

சீக்கிய பிரிவினைவாதிகளான அவதார் சிங் என்கிற கண்டா, குர்சரண்சிங், ஜஸ்வீர் சிங் ஆகியோர் இந்தவழக்கில் முதன்மை குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x