Published : 15 Apr 2023 09:18 AM
Last Updated : 15 Apr 2023 09:18 AM

மெகுல் சோக்சிக்கு ஆதரவாக ஆன்டிகுவா நீதிமன்றம் தீர்ப்பு: இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் சிக்கல்

மெகுல் சோக்சி

ஆன்டிகுவா: இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மெகுல் சோக்சியை வலுக்கட்டாயமாக நாட்டைவிட்டு வெளியேற்றமுடியாது என அவர் தற்போது தஞ்சம் புகுந்திருக்கும் ஆன்டிகுவா அண்ட் பார்புடா நாட்டின் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் ரூ.13,500 கோடி நிதி மோசடியில் தொடர்புடைய மெகுல் சோக்சி, 2018-லிருந்து ஆன்டிகுவா தீவில் வசித்து வந்தார். இதற்கிடையில் கடந்த ஆண்டு அவர் திடீரென காணாமல் போனார். பின்னர் சில நாட்கள் கழித்து தன் காதலியுடன் கியூபாவிற்கு தப்பிச் செல்ல இருந்தவரை டொமினிக்கன் தீவு போலீஸார் கைது செய்தனர். ஆனால், சோக்சி தரப்பு இதை மறுத்தது. அவர் கடத்தப்பட்டதாகவும், பார்பரா ஜராபிகா என்ற பெண் அவர் காதலியாக நடித்து கடத்தலுக்கு உதவியதாகவும் கூறினார். இதனை டொமினிக்கன் தீவு அரசும் மறுத்தது. சோஸ்கியின் காதலியும் தான் கடத்தலில் ஈடுபடவில்லை எனக் கையை விரித்தார்.

இந்நிலையில், டொமினிக்கன் தீவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு முன், ஆன்டிகுவாவுக்குத் திரும்ப அனுப்பப்படுவதற்கான முயற்சியை மேற்கொண்ட மெகுல் சோக்சியின் வழக்கறிஞர்கள் அதில் வெற்றி பெற்றனர்.

இத்தகைய சூழலில், மெகுல் சோக்சியை ஆன்டிகுவா அண்ட் பார்புடா நாட்டிலிருந்து இந்தியா கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மெகுல் சோக்சி வழக்கு உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவரை வலுக்கட்டாயமாக ஆன்டிகுவா மற்றும் பார்புடா தீவில் இருந்து வெளியேற்ற முடியாது என்று அந்நாட்டு உயர் நீதிமன்றம் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.

தனக்கு எதிரான வழக்கில் மேல்முறையீடு உள்ளிட்ட அனைத்து சட்டபூர்வ வாய்ப்புகளையும் சோக்சி இழந்த நிலையில் அவருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு சாதகமாக அமைந்துள்ளது. இதனால் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x