Published : 11 Apr 2023 04:38 AM
Last Updated : 11 Apr 2023 04:38 AM

ஆம் ஆத்மிக்கு தேசிய கட்சி அங்கீகாரம்: அந்தஸ்து இழந்த இந்திய கம்யூனிஸ்ட், திரிணமூல்

புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசிய கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அங்கீகாரம் கிடைத்துள்ளது.

தேசிய கட்சி அங்கீகாரத்தை பெற தலைமை தேர்தல் ஆணையம் சில விதிகளை நிர்ணயித்துள்ளது. 4 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில் 6 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். மக்களவை தேர்தலில் குறைந்தபட்சம் 3 மாநிலங்களில் 2 சதவீத இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். 4 மாநிலங்களில் பிராந்திய கட்சி அங்கீகாரத்தை பெற்றிருக்க வேண்டும். இந்த 3 விதிகளில் குறைந்தபட்சம் ஒரு விதியை பூர்த்தி செய்யும் கட்சிக்கு தேசிய அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

டெல்லி, பஞ்சாப், கோவா சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி 6 சதவீதத்துக்கும் அதிக வாக்குகளை பெற்றிருந்தது. கடந்த டிசம்பரில் நடந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி 13 சதவீத வாக்குகள் பெற்றது. இதைத் தொடர்ந்து ஆம் ஆத்மிக்கு தேசிய கட்சிக்கான அங்கீகாரம் வழங்கக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா அமர்வு, ஆம் ஆத்மி விவகாரத்தில் ஏப்.13-ம் தேதிக்குள் தலைமை தேர்தல் ஆணையம் முடிவெடுக்க உத்தரவிட்டது.

இந்த சூழலில் ஆம் ஆத்மிக்கு தேசிய கட்சி அங்கீகாரம் வழங்கி தலைமை தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.

அதேநேரம் திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை தேசிய கட்சிக்கான அங்கீகாரத்தை இழந்துள்ளன. புதுச்சேரியில் பாமகவுக்கு பிராந்திய கட்சி அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இந்த அங்கீகாரம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைய பட்டியலின்படி தற்போது பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பகுஜன் சமாஜ், தேசிய மக்கள் கட்சி, ஆம் ஆத்மி தேசிய கட்சிகளாக உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x