Last Updated : 15 Sep, 2017 08:55 AM

 

Published : 15 Sep 2017 08:55 AM
Last Updated : 15 Sep 2017 08:55 AM

அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலா நீக்கப்பட்டதை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் புகார்: டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மனு அளித்தனர்

அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலா நீக்கப்பட்டதை செல்லாது என அறிவிக்கக் கோரி டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தேர்தல் ஆணையத்தில் நேற்று புகார் செய்தனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். அவர் சிறை செல்ல நேர்ந்ததால் டிடிவி தினகரனை துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார். இதனிடையே, சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் போர்க்கொடி தூக்கினார். இதையடுத்து அதிமுக இரண்டாக உடைந்தது.

பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான இரு அணிகளும் இணைந்தன. இதற்கு டிடிவி தினகரன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனிடையே, பழனிசாமியும் பன்னீர்செல்வமும் இணைந்து கடந்த 12-ம் தேதி அதிமுக பொதுக்குழுவை கூட்டினர். அதில் சசிகலாவை தற்காலிக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்குவது, தினகரன் நியமனம் செல்லாது என்பன உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தேர்தல் ஆணையத்தில் நேற்று ஒரு புகார் மனுவை கொடுத்தனர். பின்னர் இதுகுறித்து மாநிலங்களவை எம்.பி.விஜிலா சத்யானந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிமுக சட்ட விதிகளுக்கு முரணாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. எனவே, பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளோம். குறிப்பாக, தற்காலிக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்குவது உட்பட பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செல்லாது என அறிவிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளோம். சட்ட விதிகளின் நகலையும் சமர்ப்பித்துள்ளோம்.

மேலும் பொதுக்குழுவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வெற்றிவேல் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தீர்மானங்கள் தீர்ப்புக்கு கட்டுப்பட்டவை என தெரிவித்தனர். எனவே, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது.

இவ்வாறு விஜிலா சத்யானந்த் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x