Last Updated : 17 Sep, 2017 10:52 AM

 

Published : 17 Sep 2017 10:52 AM
Last Updated : 17 Sep 2017 10:52 AM

நடிகையை கடத்தி துன்புறுத்திய வழக்கு: கேரள உயர் நீதிமன்றத்தில் காவ்யா மாதவன் முன்ஜாமீன் மனு

நடிகையைக் கடத்தி துன்புறுத்திய வழக்கில், முன்ஜாமீன் கேட்டு நடிகர் திலீப்பின் மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கேரளாவில் பிரபல நடிகையை கடந்த பிப்ரவரி 17-ம் தேதி ஒரு கும்பல் காரில் கடத்தி துன்புறுத்தியதாகப் புகார் எழுந்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி பல்சர் சுனி மற்றும் அவரது கூட்டாளிகளை போலீஸார் ஒரு வாரத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப்புக்குத் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரையும் போலீஸார் கைது செய்து ஆலுவா சிறையில் அடைத்தனர். கடந்த ஜூலை 10-ம் தேதியில் இருந்து அவர் சிறையில் உள்ளார். இந்நிலையில் ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த 3 மனுக்களையும் கேரள உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. அதன்பின் 4-வது முறையாக திலீப் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் திலீப்பின் மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவனுக்கும், நடிகை கடத்தலில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதனால் அவரும் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாயின.

இந்தச் சூழ்நிலையில் உயர் நீதிமன்றத்தில் காவ்யா மாதவன் நேற்று முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை திங்கட்கிழமை நடக்கும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x