Published : 09 Sep 2017 09:36 AM
Last Updated : 09 Sep 2017 09:36 AM

பாஜகவும் பிரதமர் மோடியும் சமூகத்தை பிளவுபடுத்துகின்றனர்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக பாஜகவும் பிரதமர் நரேந்திர மோடியும் சமூகத்தை பிளவுபடுத்துவதில் குறியாக உள்ளனர் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட்டில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

பிரதமர் மோடி தலைமையிலான அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்துள்ளது. இந்த நடவடிக்கையால் இந்திய திருடர்களின் கறுப்புப் பணம் வெள்ளையாக மாறியது என்பது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தெரியும். முதலில் தீவிரவாதத்தை தடுக்க பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்று சொன்னார்கள்.

அடுத்து, கறுப்பு பணத்தை தடுக்க என்று சொன்னார்கள். 90 சதவீத கறுப்பு பணம் ரியல் எஸ்டேட்டிலும் தங்கத்திலும்தான் உள்ளது என்பது இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் உண்மை நிலவரம் தெரியும்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் எவ்வளவு கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டது என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினோம்.

99 சதவீத பழைய பணம் கருவூலத்துக்கு திரும்பியது என்று சொல்வதற்கு ரிசர்வ் வங்கி ஒரு ஆண்டு எடுத்துக் கொண்டது. உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி 4.5 சதவீதமாக குறைந்துவிட்டது. இதற்கு பிரதமர்தான் காரணம்.

அதிகாரத்தை தக்கவைத்து கொள்வதற்காக பாஜகவும் பிரதமர் நரேந்திர மோடியும் சமூகத்தை பிளவுபடுத்துவதிலேயே குறியாக உள்ளனர். ஹரியாணாவில் ஜாட் மக்களுக்கும் ஜாட் அல்லாதவர்களுக்கும் மகாராஷ்டிராவில் மராட்டியர்களுக்கும் மராட்டியர் அல்லாதவர்களுக்கும் பிளவை ஏற்படுத்துகின்றனர். அவர்களது ஒரே லட்சியம் பாஜகவும் ஆர்எஸ்எஸ்சும் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதுதான்.

இதை காங்கிரஸின் கொள்கைகளால்தான் சமாளிக்க முடியும்.பாஜகவும் ஆர்எஸ்எஸ்சும் ஒன்று அல்லது இரண்டு தேர்தல்களில் போராடுவார்கள். பிறகு காங்கிரஸ்தான் ஆட்சிக்கு வரும்.

பிரதமரானபின் ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை தருவேன் என்று நரேந்திர மோடி கூறினார். இரண்டு ஆண்டுக்கு முன்பு ஒரு லட்சம் இளைஞருக்குத்தான் வேலை அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு யாருக்கும் வேலை அளிக்கப்படவில்லை. சரக்கு மற்றும் சேவை வரிக்கு (ஜிஎஸ்டி) வரிக்கு பாஜக உரிமை கொண்டாடுகிறது. ஆனால், காங்கிரஸ்தான் இதற்கான முயற்சி எடுத்தது. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x