Published : 10 Mar 2023 02:20 PM
Last Updated : 10 Mar 2023 02:20 PM

லாலு பிரசாத் யாதவுக்கு எதிரான நிலமோசடி வழக்கு | 24 இடங்களில் அமலாக்கத்துறை  சோதனை

கோப்புப்படம்

புதுடெல்லி: லாலு பிரசாத் யாதவுக்கு எதிரான நிலமோசடி வழக்கில், அவரது மகன், மகள்கள் ஆகியோரின் வீடுகள் உள்பட மொத்தம் 24 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தினர்.

நிலமோசடி குற்றச்சாட்டு தொடர்பாக பிஹார் முன்னாள் முதல்வர்களான லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியதைத் தொடந்து, அவர்களது குடும்பத்தினர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். லாலுவின் மகள்களான ராகினி யாதவ், சந்தா யாதவ், ஹேமா யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ அபு டோஜனாவின் பாட்னா வீடு, புல்வாரி ஷெரிஃப்பின் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

முன்னதாக, ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவிடம், டெல்லியில் பண்டோரா சாலையில் இருக்கும் அவரது மகள் மிசா பாரதியின் வீட்டில் வைத்து சிபிஐ அதிகாரிகள் கடந்த 7ம் தேதி 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். சமீபத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட லாலு, டெல்லியில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருக்கிறார். லாலுவிடம் விசாரணை நடத்துவதற்கு முதல் நாள் அவரது மனைவி ராப்ரி தேவியிடம் அவரது பாட்னா இல்லத்தில் வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கில், கடந்த 2004 - 2009 ம் ஆண்டு கால கட்டத்தில் லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த போது, ரயில்வேயில் வேலை வழங்க பயனாளிகளிடம் குறைந்த விலைக்கு அவர்களின் நிலங்களைப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில், லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, இவர்களது மகள்கள் மிசா, ஹேமா உள்ளிட்டவர்கள்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் பதிவு செய்யப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் லாலுவின் பெயருடன் அவரது மனைவி, மகள்கள் உள்ளிட்ட 12 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வழக்கு தொடர்பாக, கடந்த ஆண்டு ஜுலை மாதம், லாலுவின் உதவியாளர் மற்றும் முன்னாள் சிறப்பு பணி அதிகாரியான போலா யாதவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். குற்றச்சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் சிபிஐ 16 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இவர்கள் அனைவருக்கும் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

இதற்கிடையில், பாஜக அரசியல் உள்நோக்கத்துடன் மத்திய அரசின் அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி கடந்த வாரத்தில் 8 எதிர்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தன. அந்த கடிதத்தில் தேஜஸ்வி யாதவும் கையெழுத்திட்டிருந்தார். லாலுபிரசாத் யாதவை சுட்டிக்காட்டி, மத்திய புலனாய்வு அமைப்புகளால் எதிர்கட்சியினர் குறிவைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், புலனாய்வு அமைப்புகள் ஆளும் கட்சியின் அமைப்பாக செயல்படுவதாகவும் அவை குற்றம் சாட்டி இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x