“இது இந்தியாவை அவமதிக்கும் காங்கிரஸ் மனநிலை...” - ராகுல் பேச்சுக்கு அனுராக் தாக்கூர் கண்டிப்பு

அனுராக் தாக்கூர் | கோப்புப்படம்
அனுராக் தாக்கூர் | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி பேசிய பெகாசஸ் குறித்த பேச்சு "பொய் மற்றும் அவதூறு பரப்பும் காங்கிரஸின் மனநிலை" என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் ‘21-ம் நூற்றாண்டில் கேட்பதற்காக கற்றுக்கொள்வது’ என்ற தலைப்பில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியுள்ளது என்றும், பெகாஸஸ் செயலி மூலமாக தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். ராகுலின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “வெளிநாட்டு மண்ணில் போய் அழும் தனது வேலையை ராகுல் காந்தி மீண்டும் செய்திருக்கிறார். அவரது மனதில் பெகாசஸ் இருக்கிறது. மோடியின் தலைமையின் கீழ், உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவின் மரியாதை அதிகரித்துள்ளதாக இத்தாலிய பிரதமர் கூறியிருந்ததை ராகுல் காந்தி கேட்க வேண்டும்.

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்திருந்திருக்கும் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, உலகத் தலைவர்கள் அனைவராலும் அதிகம் விரும்பப்படும் ஒருவராக மோடி இருக்கிறார். அவர் ஒரு முக்கியமான தலைவராக உள்ளார். அதற்காக அவருக்கு எனது வாழ்த்துகள் என்று கூறியிருக்கிறார்.

நேற்று வெளியாகியிருக்கும் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் அழிக்கப்பட்டுவிட்டதை தெரிவிக்கின்றன. மக்களின் முடிவுகளை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. மக்கள் பிரதமர் மோடியை நம்புகிறார்கள். இந்தத் தோல்வியை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கலாம். ஒவ்வொரு மாநிலமாக அவர்கள் இழந்து வருகிறார்கள். இதுதான் காங்கிரஸின் மனநிலை... இந்தியாவை அவமானப்படுத்துவது.

ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி மீது வெறுப்பு இருக்கலாம். ஆனால், நாட்டு மக்களிடம் அப்படியான எதுவும் இல்லை. இது காங்கிரஸின் நோக்கம் என்ன என்ற கேள்வியை எழுப்புகிறது” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்வினையாற்றியுள்ள பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா, "ஒரு நபர்களின் மீதான அவர்களின் வெறுப்பு, நாட்டின் மீதான வெறுப்பாக மாறியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in