Published : 03 Mar 2023 12:37 PM
Last Updated : 03 Mar 2023 12:37 PM

''பெகாஸஸ் செயலி மூலம் எனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டன'': ராகுல் காந்தி

கேம்பிரிட்ஜ்: பெகாஸஸ் செயலி மூலமாக தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இடையே உரையாற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து, அவர் கடந்த செவ்வாய் அன்று லண்டன் சென்றார். பல்கலையில், ‘21-ம் நூற்றாண்டில் கேட்பதற்காக கற்றுக்கொள்வது’ என்ற தலைப்பில் ராகுல் காந்தி உரையாற்றினார். அவரது உரையின் யூடியூப் வீடியோ லிங்கை காங்கிரஸ் பிரமுகரும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகருமான சாம் பிரிட்டோ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ராகுல் காந்தியின் உரை விவரம்: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உரையாற்றுவதற்கான வாய்ப்பை அளித்ததற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் எனது உரையைத் தொடங்குவதற்கு முன்பாக இந்தியாவை பற்றி கொஞ்சம் சொல்ல விரும்புகிறேன். இந்திய ஜனநாயகம் தற்போது பெரும் அழுத்தத்திற்கும், தாக்குதலுக்கும் உள்ளாகி வருகிறது என்பதை அனைவரும் அறிவோம். நான் இந்தியாவின் ஒரு எதிர்கட்சித் தலைவர். அந்த வழியில்தான் (எதிர்கட்சித்தலைவர்) நாங்கள் பயணிக்கிறோம். ஒரு ஜனநாயக நிறுவன கட்டமைப்பிற்கு தேவையான அடிப்படைகளான நாடாளுமன்றம், சுதந்திரமான ஊடகங்கள், நீதித்துறை, ஒன்றிணைவதற்கான எண்ணங்கள் அனைத்தும் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதனால் நாங்கள் இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பின் மீதான தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறோம்.

இந்திய அரசியலமைப்பு, இந்தியாவை மாநிலங்களின் கூட்டமைப்பு என்று சொல்கிறது. அந்த கூட்டமைப்புக்கு இடையே பேச்சுவார்த்தையும் உரையாடல்களும் தேவையாக இருக்கின்றன. ஆனால், அது தற்போது தாக்குதலுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகியிருக்கிறது. நீங்கள் பார்க்கும் இந்த படம், இந்திய நாடாளுமன்றத்திற்கு வெளியே எடுக்கப்பட்டது. எதிர்கட்சித் தலைவர்கள் அங்கு நின்றுகொண்டு சில பிரச்சினைகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அதற்காக நாங்கள் சிறையில் அடைக்கப்பட்டோம். இதுபோல மூன்று நான்கு தடவை நடந்திருக்கின்றது. ஒப்பீட்டளவில் இதுவும் ஒரு வன்முறையே. அதேபோல, ஊடகங்கள் மீதும், சிறுபான்மையினர் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுவது குறித்தும் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதிலிருந்து நீங்கள் அங்கு என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ளமுடியும்.

எனது செல்போனிலும் பெகாஸஸ் இருந்தது. பெரும்பாலான அரசியல்வாதிகள் அவர்களின் செல்போன்களில் பெகாஸஸ் வைத்திருந்தனர். ஒரு உளவுப்பிரிவு அதிகாரி என்னை அழைத்து, "தயவுசெய்து போனில் பேசும்போது கவனமாக இருங்கள். நாங்கள் உங்கள் உரையாடல்களை பதிவு செய்கிறோம்" என்றார். இதுதான் நாங்கள் தொடர்ந்து அனுபவித்து வரும் அழுத்தம். எந்த வகையிலும் குற்றவியல் வழக்குகளாக ஆகமுடியாத விஷயங்களுக்காக என்மீது சில குற்றவியல் வழக்குகள் போடப்பட்டுள்ளன. இவைகளைத் தான் நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம்" என்றார்.

பாஜக அரசாங்கம் பற்றி சில நல்ல விஷயங்களை குறிப்பிடும்படி ராகுல் காந்தியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "உங்களுக்கு ஒரு சிலவற்றின் அடிப்படைகள் மீது நம்பிக்கை இல்லாத போது... அதாவது, பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கியது என்று நான் நினைக்கிறேன். வங்கிக்கணக்கு தொடங்கியது தவறான விஷயம் இல்லை. ஆனால் என்னுடைய பார்வையில், நரேந்திர மோடி இந்தியாவை அழித்துக் கொண்டிருக்கிறார். அவர் நாட்டை பாழாக்குவார் என்றால் அவர் செய்யும் ஒரு சில நல்ல விஷயங்கள் எனக்கு பெரியதாகத் தெரியப்போவதில்லை. அவர் அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறார்'' என்று கூறினார்.

மேலும் இந்திய ஒற்றுமை யாத்திரையை பற்றிக்கூறும் போது, என்னை ஒரு சகோதரனாக நம்பி, தன்னுடன் கரம் கோர்த்து பயணித்தவர்களுடன் நடந்த உரையாடல்கள் ஒரு அரசியல்வாதியாக தன்னுடைய பார்வையை மாற்றியுள்ளன என்று ராகுல் காந்தி தெரவிதித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x