Published : 06 Sep 2017 09:24 AM
Last Updated : 06 Sep 2017 09:24 AM
சட்ட அமைச்சகம் மூலம் மட்டுமே ஆலோசனை கேட்க வேண்டும் என்றும் நேரடியாக அணுகக் கூடாது என்றும் மத்திய அரசுத் துறைகளுக்கு அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய அரசின் பல்வேறு துறை சார்ந்த அமைச்சகங்கள் பல்வேறு பிரச்சினை தொடர்பாக அட்டர்னி ஜெனரலிடம் நேரடியாக சட்ட ஆலோசனை கேட்டிருந்தன. இந்நிலையில், அந்த அமைச்சகங்களின் செயலாளர்களுக்கு அட்டர்னி ஜெனரல் அலுவலகம் கடிதம் எழுதியுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், “எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் மத்திய அரசுத் துறைகள் நேரடி யாக சட்ட ஆலோசனை கேட்கக் கூடாது. சட்ட அமைச்சகம் மூலம் மட்டுமே ஆலோசனை கேட்க வேண்டும். மேலும் ஆலோசனை கேட்கும்போது, குறிப்பிட்ட பிரச்சினை குறித்து சுருக்கத்தை தெரிவிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இதற்கு முன்பு அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்த முகுல் ரோஹத்கி இதற்கு நேர் மாறான கருத்தைக் கொண்டிருந்தார். அதாவது, மத்திய அரசுத் துறைகள் தங்கள் பிரச்சினை தொடர்பாக நேரடியாக அட்டர்னி ஜெனரலிடம் ஆலோசனை கேட்க அனுமதிக்க வேண்டும் என்பதும் சட்ட அமைச்சகத்தின் மூலம் அணுகினால் காலதாமதம் ஆகும் என்பதும் அவரது கருத்து.
இதுகுறித்து சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் முகுல் ரோஹத்கி எழுதிய கடிதத்தில், “அவசரம் கருதி சட்ட அமைச்சகம் மூலம் அட்டர்னி ஜெனரலிடம் ஆலோசனை கேட்பதற்கு அமைச்சர்களே மறுப்பு தெரிவித்தனர்” என கூறியிருந்தார்.
சட்ட அமைச்சகத்தின் பரிந்துரை இல்லாமல், எந்த துறைக்கும் சட்ட ஆலோசனை வழங்கக் கூடாது என சட்ட அதிகாரிகள் (சேவைகள் நிலை) விதிகள், 1972-ன் 8(இ) பிரிவில் கூறப்பட்டுள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் 76-வது பிரிவுக்கு முரணானது என ரோஹத்கி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT