Last Updated : 26 Feb, 2023 11:00 PM

3  

Published : 26 Feb 2023 11:00 PM
Last Updated : 26 Feb 2023 11:00 PM

நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பதற்காக மதச்சார்பற்ற அனைத்துக் கட்சிகளும் இணைந்து போராட வேண்டும்: டி.ராஜா பேச்சு

புதுச்சேரியில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழுக்கூட்டத்தில் டி.ராஜா மற்றும் முக்கிய பிரதிநிதிகள்

புதுச்சேரி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழுக்கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அக்கட்சின் கருத்தரங்கம் புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் இன்று (ஞாயிறு) நடைபெற்றது.

புதுச்சேரி மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். தெலுங்கானா தேசிய செயலாளர் நாராயணா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொலிட்பீரோ உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ தமிழ்நாடு மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் முத்தரசன், விசிக எம்பி ரவிக்குமார், புதுச்சேரி எதிர்கட்சி தலைவர் சிவா மற்றும் கேரளா அமைச்சர்கள், புதுச்சேரி நிர்வாகிகள் உட்பட நாடு முழுவதிலும் இருந்து பலர் கலந்து கொண்டனர்.

இதில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். நாடு முழுவதும் ஆளுநர் பதவிகளை ரத்து செய்ய வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

சிபிஐ தேசியக்குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா தீர்மானங்களை முன்மொழிந்தார். இந்த கருத்தரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசியதாவது.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற நியாயமான கோரிக்கை எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆனால் ஏன்? அது கொடுக்கப்படவில்லை. புதுச்சேரிக்கு மட்டுமல்ல தேசிய தலைநரான டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை இருக்கிறது. அவர்களும் டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று கேட்கின்றனர்.

ஜம்மு காஷ்மீர் ஒரு மாநிலமாக இருந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை இருந்தது. முதல்வர்கள் இருந்தார்கள். ஆனால், இன்றைக்கு ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்தை இழந்து நிற்கிறது. ஜம்மு காஷ்மீருக்கு ஏற்பட்ட நிலைமை, வேறு மாநிலத்துக்கு வராது என்று யாரும் கருத முடியாது.

இதை நாம் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். புதுச்சேரி, டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, சட்டப்பேரவை இருந்தும் மாநில அந்தஸ்து இல்லை. இது எங்கே போய் முடியும்? இது தான் இன்றைக்கு கேள்வி.

இன்றைக்கு மத்திய அரசு யாரிடம் இருக்கிறது என்றால் நாட்டின் சுதந்திரத்துக்கு போராடாத, நாட்டு மக்களை மத ரீதியாக பிரித்து கலவரத்தை உருவாக்குகிற, நாட்டை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிக்க துணை நிற்கின்ற பாஜக ஆர்எஸ்எஸ்-ன் பிடியில் இருக்கிறது.

பல மாநிலங்கள் சேர்ந்த மதச்சார்பற்ற நாடாக இந்தியா இருக்கவே அம்பேத்கர் ஆசைப்பட்டார். நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கும் வகையிலே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரப்படுகிறது. பாஜகவின் தலைவர்களாக இருந்தவர்களே புதுச்சேரி உள்ளிட்ட மாநில ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் மார்க்ஸ் குறித்து விமர்சித்துள்ளார். ஆனால் மின்சாரம், மார்க்ஸ் கொள்கையைத் தவிர்த்து யாரும் உயிர் வாழ முடியாது என கவிஞர் வைரமுத்து அண்மையில் கூறியுள்ளதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆளுநர் பொறுப்பில் இருப்பவர்கள் சாமானியரைப் போல பேசுவோரை ஆளுநராக நீடிப்பதற்கு குடியரசுத் தலைவர் அனுமதிக்கக் கூடாது. மத்திய பாஜக அரசு செயல்படுத்திய ஜிஎஸ்டி உள்ளிட்ட அனைத்தும் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவானவைதான். ஆகவே, நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பதற்காக மதச்சார்பற்ற அனைத்துக் கட்சிகளும் இணைந்து போராட வேண்டும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x