Published : 20 Feb 2023 05:36 PM
Last Updated : 20 Feb 2023 05:36 PM

பிஹார் அரசியல் | நிதிஷ் கட்சியில் இருந்து வெளியேறி புதிய கட்சியைத் தொடங்கினார் உபேந்திர குஷ்வாஹா

பாட்னா: ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகுவதாகவும், ராஷ்ட்ரிய லோக் ஜனதா தளம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்குவதாகவும் முன்னாள் மத்திய அமைச்சரான உபேந்திர குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான உபேந்திர குஷ்வாஹா, கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் தனது ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சியை ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைத்தார். அதன் பிறகு, ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்த நிதிஷ் குமார், அக்கட்சியின் தலைவரான தேஜஸ்வி யாதவை பிகாரின் வருங்கால தலைவர் என்றும், வருங்கால முதல்வர் என்றும் கூறினார். இதனால் அதிருப்தி அடைந்த உபேந்திர குஷ்வாஹா, நிதிஷ் குமாரை விமர்சிக்கத் தொடங்கினார். கடந்த சில மாதங்களாக இந்த விமர்சனப் போக்கு நீடித்து வந்த நிலையில், அவர் எப்போது வேண்டுமானாலும் கட்சியை விட்டு விலகக் கூடும் என பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்த உபேந்திர குஷ்வாஹா, ராஷ்ட்ரிய லோக் ஜனதா தள் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். மேலும், அந்தக் கட்சியின் தேசியத் தலைவராக தான் இருக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த அறிவிப்பு பிஹார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக, கடந்த 15-ம் தேதி ‘தி இந்து’ நாளிதழுக்கு பேட்டி அளித்த உபேந்திர குஷ்வாஹா, தேஜஸ்வி யாதவ் பிகார் முதல்வரானால் மாநிலத்தில் மீண்டும் காட்டாட்சி தொடங்கிவிடும் என எச்சரித்தார். லாலு பிரசாத் யாதவ் எவ்வாறு பிஹார் மாநிலத்தை அழித்தாரோ அதேபோன்று தேஜஸ்வி யாதவ் அழித்துவிடுவார் என்றும் குஷ்வாஹா விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x