Published : 18 Feb 2023 05:06 AM
Last Updated : 18 Feb 2023 05:06 AM

14 நாள் சிசுவின் சடலத்துடன் பைக்கில் சென்ற பெற்றோர் - ஆம்புலன்ஸ் வழங்காததால் சோகம்

குழந்தையின் சடலத்தை பைக்கில் கொண்டு சென்ற பெற்றோர்.

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராமராஜு மாவட்டம், கும்மடா கிராமத்தை சேர்ந்தவர் மத்யராஜு. இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். கடந்த 2-ம் தேதி, பாடேரு அரசு மருத்துவமனையில் மகேஸ்வரிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தைக்கு சுவாச பிரச்சினை ஏற்பட்டதால், விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் 16-ம் தேதி குழந்தை இறந்தது. இதனால் பெற்றோர் கண்ணீருடன் ஊர் திரும்ப ஆம்புலன்ஸ் கேட்டனர். ஆனால், அரசு மருத்துவமனை தர மறுத்து தனியார் ஆம்புலன்ஸில் செல்ல அறிவுரை செய்தனர்.

ஆனால், தனியார் ஆம்புலன்ஸ் ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை கட்டணம் கேட்டுள்ளனர். இதனால் இறந்த குழந்தை சடலத்துடன் அவர்கள் 130 கி.மீ தூரம் உள்ள தங்களது சொந்த ஊருக்கு பைக்கில் சென்றனர்.

இது உடனடியாக பல சமூக ஊடகங்களில் வீடியோவுடன் வெளியானது. பின்னர் பாடேரு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து, அங்கிருந்து ஒரு ஆம்புலன்ஸை அனுப்பினர். இதையடுத்து நடுவழியில் சென்றுகொண்டிருந்த தாயையும், இறந்து போன குழந்தையையும் ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு வீட்டில் கொண்டு போய்விட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x