Last Updated : 15 Feb, 2023 07:27 PM

 

Published : 15 Feb 2023 07:27 PM
Last Updated : 15 Feb 2023 07:27 PM

அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் நாடகம்: பெங்களூரு ஜெயின் பல்கலை. முதல்வர், மாணவர்கள் உட்பட 9 பேர் கைது

பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழகத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் | கோப்புப்படம்

பெங்களூரு: பாபாசாகேப் அம்பேத்கரையும், பட்டியலின மக்களையும் அவமதிக்கும் வகையில் நாடகம் அரங்கேற்றிய ஜெயின் பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேர், கல்லூரி முதல்வர், நிர்வாகி உள்ளிட்ட 9 பேரை பெங்களூரு போலீஸார் கைது செய்துள்ளனர்.

பெங்களூருவில் உள்ள ஜெயின் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியின்போது மாணவர்கள் சிலர் பாபாசாகேப் அம்பேத்கரையும் பட்டியலின ம‌க்களையும் இழிவுபடுத்தும் வகையில் நாடகம் அரங்கேற்றினர். இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தலித் அமைப்பினரும், பாபாசாகேப் அம்பேத்கர் மாணவ அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

பெங்களூருவில் கடந்த இரு தினங்களாக ஜெயின் பல்கலைக் கழகத்தை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மும்பை, பெங்களூரு, குடகு, குல்பர்கா, கோலார் உள்ளிட்ட இடங்களில் தலித் அமைப்பினர் ஜெயின் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக போலீஸில் புகார் அளித்தனர். பெங்களூரு பல்கலைக்கழக இளங்கலை மாணவர்கள் ஜெயின் பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் ஜெயின் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

இதனிடையே, கர்நாடக சமூக நலத்துறை துணை இயக்குநர் மதுசுதனா ஜெயின் பல்கலைக்கழகத்தின் மீது பெங்களூரு மாநகர தெற்கு காவல் இணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பெங்களூரு போலீஸார் நாடகம் அரங்கேற்றிய மாணவர்கள் 7 பேர், ஜெயின் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் முதல்வர் முனைவர் தினேஷ் நில்காமத், பல்கலைக்கழக நிர்வாகி முனைவர் சுனில் குமார் ஆகிய 9 பேர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் 5 பிரிவுகள் மற்றும் இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 253ஏ,149,295ஏ ஆகிய 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, 7 பேரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு பரபரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே, ஜெயின் பல்கலைக்கழகம் விடுத்துள்ள அறிக்கையில், ''சட்டமேதை பாபாசாகேப் அம்பேத்கரையும், பட்டியலின மக்களையும் அவமதிக்கும் வகையில் நாடகம் அரங்கேற்றியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்'' என மன்னிப்பு கோரியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x