Published : 14 Feb 2023 05:43 AM
Last Updated : 14 Feb 2023 05:43 AM

டெல்லி மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர் வாக்களிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 இடங்களுக்கு கடந்த டிசம்பரில் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி 134, பாஜக 104, காங்கிரஸ் 9, சுயேச்சைகள் 3 பேர் என வெற்றி பெற்றனர். ஆம் ஆத்மி சார்பில் மேயர் பதவிக்கு ஷெல்லி ஓபராயும் துணை மேயர் பதவிக்கு ஆலே முகமது இக்பாலும் அறிவிக்கப்பட்டனர். பாஜகவும் மேயர், துணை மேயர் வேட்பாளர்களை அறிவித்தது.

நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க பாஜக வலியுறுத்தியதால் அமளி ஏற்பட்டது. இதனால் 3 முறை அவை கூடியும் மேயர் தேர்தலை நடத்த முடியவில்லை.

இந்நிலையில் டெல்லி மேயர் தேர்தலை காலக்கெடுவுக்குள் நடத்தி முடிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதி மன்றத்தில் ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் ஷெல்லி ஓபராய் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது “தேர்தலில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது. அரசியலமைப்பு விதி மிகவும் தெளிவாக உள்ளது" என்று அமர்வு குறிப்பிட்டது. இதையடுத்து இவ்வழக்கை வரும் 17-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இதைத் தொடர்ந்து வரும் 16-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த மேயர் தேர்தல் 17-ம் தேதிக்கு பிறகு தள்ளிவைக்கப்படும் என நீதிமன்றத்தில் துணைநிலை ஆளுநர் அலுவலகம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x