Last Updated : 13 Feb, 2023 05:55 AM

 

Published : 13 Feb 2023 05:55 AM
Last Updated : 13 Feb 2023 05:55 AM

இஸ்லாம் இந்தியாவில் தோன்றியது, வெளிநாட்டிலிருந்து வரவில்லை: ஜமாத் உலாமா-எ-ஹிந்த் தலைவர் மதானி கருத்து

மவுலானா மஹமூத் மதானி | கோப்புப்படம்

புதுடெல்லி: இஸ்லாம் இந்தியாவில் தோன்றியது, வெளிநாட்டில் இருந்து வரவில்லை என்று ஜமாத் உலாமா-எ-ஹிந்த் அமைப்பின் தலைவர் மவுலானா மஹமூத் மதானி கூறினார்.

சமூக மத அடிப்படையிலான ஜமாத் உலாமா-எ-ஹிந்த் அமைப்பு கடந்த 1919-ல் தோன்றியது. இது இந்தியாவின் மிகப் பழமையான முஸ்லிம் அமைப்பாகக் கருதப் படுகிறது. இதன் 34-வது 3 நாள் பொது மாநாடு டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடந்தது.

மாநாட்டில், அமைப்பின் தலைவர் மவுலானா மஹமூத் மதானி தலைமை உரையாற்றும்போது, “இஸ்லாம் இந்தியாவில் தோன்றியது. அது வெளிநாட்டிலிருந்து வரவில்லை” என்றார்.

இது தொடர்பாக அவர் பேசும்போது, “நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அவரது தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆகியோருக்கு இந்த இந்தியா எவ்வளவுசொந்தமோ, அவ்வளவு இந்த மஹமூதிற்கும் சொந்தமானது. இவர்களுக்கு மஹமூத் அடிமை அல்ல. அதேபோல், அவர்களும் மஹமூதிற்கு அடிமைகள் அல்ல. இந்திய மண்ணின் முக்கியத்துவம் எதுவென்பதை கவனமாகக் கேளுங்கள்.

அல்லாவின் முதல் இறைத்தூதர் அபுல் பஷர் சையதினா ஆதம் சல்லல்லா அலைவுஹ சலாம் இந்தியாவில் பிறந்தவர். இந்த இந்திய மண்ணில்தான் இஸ்லாம் பிறந்தது. இது, முஸ்லிம்களின் முதல் தாய்நாடு. இஸ்லாம் வெளிநாடுகளிலிருந்து வந்தது என்பது முற்றிலும் தவறானது. இதை நாம் உணர்ந்து அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

இந்த இஸ்லாம் உலகில் தோன்றிய முதலாவது மதம் ஆகும். இதுதான் இதர அனைத்து சாதி, மதங்களை விடப் பழமையானது. இஸ்லாத்தின் கடைசி இறைத்தூதரான அசரத் முஹம்மது சல்லல்லாஅலைவுஹ ஸல்லம், நமது மதத்தை நிலைநிறுத்தவே வந்திருந்தார். எனவே, இந்தியாவும் அதன் மதமான இஸ்லாமும் அனைத்தை விட சிறந்தது” என்றார்.

நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மவுலானாக்கள் மாநாட்டில் கலந்துகொண் டனர்.

இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு மதச்சுதந்திரம் தேவை. இஸ்லாமியர் களுக்கு முஸ்லிம் தனிச்சட்டம் மட்டுமே அமலாக்கப்பட வேண்டும்.இஸ்லாமியர்களுக்கு அரசு தனி இடஒதுக்கீடு அறிவிக்க வேண்டும். சமூக கட்டமைப்பை பலப்படுத்தி இதர மதங்களுடன் சகோதரத்துவம் தொடர வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x