Published : 13 Feb 2023 06:08 AM
Last Updated : 13 Feb 2023 06:08 AM

தீண்டாமையை எதிர்த்தவர் சுவாமி தயானந்த சரஸ்வதி: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்

சுவாமி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்த தின விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.

புதுடெல்லி: தீண்டாமைக்கு எதிராக போராடியவர் சுவாமி தயானந்த சரஸ்வதி என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.

குஜாரத்தின் மோர்பி மாவட்டம், தன்காராவில் கடந்த 1824-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி சுவாமி தயானந்த சரஸ்வதி பிறந்தார். ஆரிய சமாஜத்தை தோற்றுவித்த அவர் சமூக சீர்திருத்தவாதி ஆவார். அவரது காலத்தில் நிலவிய சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து தீவிரமாகப் போராடினார். சமூக சீர்திருத்தங்கள், பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார். அவரது 200-வது பிறந்த தின விழா டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது.

சுவாமி தயானந்த சரஸ்வதியின் 200-வது ஆண்டு பிறந்த விழா அடுத்த 2 ஆண்டுகளுக்கு கொண்டாடப்படும். அவர் வாழ்ந்த காலத்தில் இந்தியா அடிமைத்தனத்தில் இருந்தது. அந்த நேரத்தில் இந்தியாவின் லட்சியங்கள், கலாச்சாரத்தை பாதுகாக்க அவர் முயற்சி மேற்கொண்டார். வேதங்கள் மீது தவறான விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது ஒரு மீட்பராக அவர் உருவெடுத்தார்.

சமூக பாகுபாடு, தீண்டாமை போன்ற அவலங்களுக்கு எதிராக அவர் பிரச்சாரம் செய்தார். குறிப்பாக, தீண்டாமைக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார். இதை தேசத்தந்தை காந்தியடிகளே பாராட்டினார்.

பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை சுவாமி தயானந்த சரஸ்வதி மிகக் கடுமையாக எதிர்த்தார். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பேபெண் கல்வி, பெண் சம உரிமையை வலியுறுத்தி அவர் பிரச்சாரம் செய்தார்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த அமுத காலத்தில் சுவாமியின் 200-வது பிறந்த ஆண்டு விழாவை கொண்டாடுவது நாட்டுக்கு உத்வேகம் அளிக்கிறது.

‘வேதங்களுக்குத் திரும்பு வோம்' என்று அவர் அழைப்பு விடுத்தார். இதையேற்று அவரது வழியில் மக்கள் நடக்கின்றனர். நவீனத்துவத்தின் பாதையில் செல்லும் அதே வேளையில் மரபுகள், கலாச்சாரத்தையும் இந்திய மக்கள் பாதுகாக்கின்றனர்.

தத்துவம், யோகா, கணிதம், கொள்கை, ராஜதந்திரம், அறிவியல்மற்றும் மருத்துவ அறிவியல் ஆகிய துறைகளில் இந்திய ஞானிகளின் பங்களிப்பு அளப்பரியது. அந்த வகையில் நமது நாட்டின் பழமையான பாரம்பரியத்தை மீட்டெடுப்பதில் சுவாமி தயானந்த சரஸ்வதி பெரும் பங்கு வகித்தார். கடந்த 2001-ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது சமூகசேவை மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் அவரது அமைப்பின் அறக்கட்டளை மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியது.

சுவாமி தயானந்த சரஸ்வதி காட்டிய வழியில் நாம் நடக்கிறோம். ஒடுக்கப்பட்டோர், ஏழைகள், பிற்படுத்தப்பட்டோரின் நலனில் அரசு அதிக அக்கறை செலுத்துகிறது. மக்களின் வீட்டுவசதி, மருத்துவ சிகிச்சை மற்றும் மகளிருக்கு அதிகாரம் அளித்தல் ஆகிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. புதிய கல்விக் கொள்கை அமல் செய்யப்பட்டிருக்கிறது.

ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருக் கிறது. இந்த நேரத்தில் பழங்கால ஞானத்தின் அடித்தளத்துடன் நவீன லட்சியங்களை ஊக்குவிக்க ஆர்ய சமாஜ் மிகப்பெரிய பங்களிப்பை வழங்க வேண்டும். இயற்கை விவசாயம், சிறுதானியங்கள் பயன் பாட்டை ஊக்குவிக்க பிரச்சாரம் செய்ய வேண்டும்.

லோகமான்ய திலகர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், வீர சாவர்க் கர், லாலா லஜபதி ராய், லாலா ஹர்தயாள், சந்திரசேகர் ஆசாத், ராம் பிரசாத் பிஸ்மில் உட்பட எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள், தயானந்த சரஸ்வதியிடம் இருந்து உத்வேகம் பெற்றனர்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். 150 ஆண்டுக்கு முன்பே பெண் கல்வி, பெண் சம உரிமை குறித்து பிரச்சாரம் செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x