Last Updated : 09 Feb, 2023 07:58 PM

 

Published : 09 Feb 2023 07:58 PM
Last Updated : 09 Feb 2023 07:58 PM

தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு வரும் புகார்களில் உ.பி முதலிடம்: மத்திய அரசு பதிலில் தகவல்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, விழுப்புரம் எம்.பி டி.ரவிக்குமார்

புதுடெல்லி: தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு வரும் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து இன்று மக்களவையில் விழுப்புரம் எம்.பி டி.ரவிக்குமார் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார்.

இது குறித்து இன்று நாடாளுமன்ற மக்களவையில் விழுப்புரம் தொகுதி எம்.பி ரவிக்குமார் எழுப்பிய கேள்வியில், ''2011 வரை மட்டுமே தேசிய சிறுபான்மையினர் கமிஷன் (என்சிஎம்) நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கைகளை (ஏடிஆர்) சமர்ப்பித்துள்ளதா? அப்படியானால், கடந்த பத்து ஆண்டுகளாக ATRகளை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதற்கான காரணங்களுடன் அதன் விவரங்களைத் தருக. சிறுபான்மையினர் நலனுக்காக மாவட்ட அளவிலான குழுக்களை அமைப்பதற்கு அமைச்சகத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?'' எனக் கேட்டிருந்தார்.

இதற்கு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்துள்ள எழுத்துபூர்வ பதில்: ''தேசிய சிறுபான்மையினர் கமிஷன் சட்டம்-1992 இன் பிரிவு 12 மற்றும் 13இன் படி, என்சிஎம் குறிப்பிட்ட வடிவத்தில் குறிப்பிட்ட காலத்தில் ஆண்டு அறிக்கையைத் தயார் செய்ய வேண்டும். ஒவ்வொரு நிதியாண்டுக்கும், சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டபடி, முந்தைய நிதியாண்டில் அதன் செயல்பாடுகள் குறித்த அதன் வருடாந்திர அறிக்கையைத் தயார் செய்து அதை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.

மத்திய அரசு அந்த அறிக்கை, அதில் உள்ள பரிந்துரைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த குறிப்பாணை, பரிந்துரைகளில் ஏற்க முடியாத பரிந்துரை ஏதேனும் இருந்தால், ஏற்காததற்கான காரணங்கள் ஆகியவற்றை இணைத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் முன்பும் இயன்ற விரைவில் வைக்கப்பட வேண்டும். தேசிய சிறுபான்மையினர் கமிஷன் 2021-22 வரையிலான வருடாந்திர அறிக்கைகளை சிறுபான்மை விவகார அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது. என்சிஎம் சட்டம்-1992 இன்படி, சிறுபான்மையினர் நலனுக்காக மாவட்ட அளவிலான குழுக்களை அமைப்பதற்கான எந்த ஏற்பாடும் இல்லை'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரவிக்குமார் எம்.பி. பேட்டி: மத்திய அமைச்சரின் பதில் குறித்து செய்தியாளர்களிடம் தனது கருத்தாக எம்.பி டி.ரவிகுமார் கூறியது: ''மத்திய அமைச்சர் அளித்துள்ள புள்ளி விவரங்களைப் பார்க்கும்போது சிறுபான்மையினரின் பாதிப்பு அதிகரிப்பது தெரிகிறது. 2017-18-ஆம் ஆண்டில் 1498 புகார்கள் வந்துள்ளன. அவற்றில் முஸ்லிம்களிடமிருந்து வந்த புகார்கள் 1128. அதற்கு அடுத்த ஆண்டில் 1871 புகார்கள் வந்துள்ளன. அதில் 1344 புகார்கள் முஸ்லிம்களிடமிருந்து வந்தவையாகும். 2019-20ஆம் ஆண்டில் பெறப்பட்ட 1670 புகார்களில் 1232 புகார்கள் முஸ்லிம்களிடமிருந்து வந்தவை.

2020- 21ஆம் ஆண்டில் 1463 புகார்கள் வந்துள்ளன, அதில் 1105 புகார்கள் முஸ்லிம்களிலிருந்து வந்தவை. 2021-22ஆம் ஆண்டில் பெறப்பட்ட 2076 புகார்களில் 1420 முஸ்லிம்களிடமிருந்து வந்தவை ஆகும். நடப்பு நிதியாண்டில் 31.1.2023 வரை பெறப்பட்ட 1984 புகார்களில் 1279 முஸ்லிம்களிடமிருந்து வந்தவை. சிறுபான்மையினரிடமிருந்து வந்த புகார்களின் எண்ணிக்கையை வைத்து பார்க்கும்போது உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்துதான் அதிகமான புகார்கள் வந்துள்ளன. அதற்கு அடுத்ததாக டெல்லியில் அதிகமாகப் புகார்கள் எழுந்துள்ளன.

அந்தப் புகார்களின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படாதது பற்றி நான் எழுப்பிய வினாவுக்கு அமைச்சர் பதில் அளிக்கவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2017-18ஆம் ஆண்டில் மொத்தம் 35 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 12 முஸ்லிம்களிடமிருந்தும் 15 கிறித்தவர்களிடமிருந்தும் பெறப்பட்டுள்ளது.

2018-19ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்து 47 புகார்கள் வந்துள்ளன. அவற்றில் 17 முஸ்லிம்களிடமிருந்தும் 23 கிறிஸ்தவர்களிடம் இருந்தும் வந்துள்ளன. 2019-20ஆம் ஆண்டில் மொத்தம் 52 புகார்கள் தமிழ்நாட்டில் இருந்து தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு வந்துள்ளது. அதில் 22 முஸ்லிம்களிடமிருந்தும் 24 கிறிஸ்தவர்களிடமிருந்தும் வந்துள்ளன. 2020-21ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் 64 புகார்களில் 40 முஸ்லிம்களிடமும், 23 கிறிஸ்தவர்களிடமிருந்தும் வந்துள்ளன. 2021-22ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் 48 புகார்களில் 14 முஸ்லிம்களிடமிருந்தும், 26 கிறிஸ்தவர்களிடமிருந்து வந்துள்ளன.

இந்த ஆண்டில் 31.1.2023 வரையிலான பத்து மாதங்களில் தமிழ்நாட்டின் 39 புகார்களில் 23 முஸ்லிம்களிடமிருந்தும், 10 புகார்கள் கிறித்தவர்களிடமிருந்தும் வந்துள்ளன. இந்திய அளவில் சிறுபான்மையினரிடமிருந்து வரும் புகார்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டிலும் அதன் தடயத்தைப் பார்க்க முடிகிறது.

முஸ்லிம்களிடமிருந்து வரும் புகார்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் அதன் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஆனால், கிறித்தவர்களிடம் இருந்து ஒப்பீட்டளவில் அதிகமாக புகார்கள் பெறப்பட்டுள்ளன. இந்திய அளவில் ஒட்டுமொத்தமாக கிறிஸ்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்கள் 100 முதல் 150க்குள்தான் உள்ளன. அதில் சதவிகிதத்தில் 15 முதல் 20 வரை தமிழ்நாட்டில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது'' என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x