Published : 05 Feb 2023 04:43 AM
Last Updated : 05 Feb 2023 04:43 AM

மதமாற்ற தடை சட்டத்தை எதிர்த்து வழக்கு - உ.பி. உட்பட 7 மாநிலங்கள் பதில் அளிக்க நோட்டீஸ்

புதுடெல்லி: உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், கர்நாடகா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய 7 மாநில அரசுகள் மதமாற்ற தடை சட்டத்தை இயற்றி உள்ளன. ஒருவரை மதமாற்றம் செய்வதற்கு முன் அல்லது மதம் மாற்றி திருமணம் செய்வதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதி பெற வேண்டும் என இந்த சட்டங்கள் கூறுகின்றன.

திருமணம் உட்பட பல்வேறு ஆசை வார்த்தைகளைக் கூறியும் பெண்களை காதல் வலையில் வீழ்த்தியும் (லவ் ஜிகாத்) மதமாற்றம் செய்வதைத் தடுக்கவே இந்த சட்டங்கள் இயற்றப்பட்டதாக அந்த மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

இந்த சட்டங்களை எதிர்த்து அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களில் பலர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதுபோல உச்ச நீதிமன்றத்திலும் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டம் அரசியல் சாசனம் வழங்கி உள்ள மத சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளதாக மனுக்களில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுக்கள் குறித்து பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட 7 மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதுபோல, உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களையும் உச்ச நீதிமன்றத்துக்கே மாற்றி மொத்தமாக விசாரிக்கலாமா என்பது குறித்து பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x