Published : 16 Dec 2016 10:12 AM
Last Updated : 16 Dec 2016 10:12 AM
மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, கடந்தாண்டு தனது முகநூல் பக்கத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில், மகாத்மா காந்தி மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்து தெரிவித்த சில கருத்துகள் சர்ச்சையை உண்டாக்கியது.
ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கையை பின்பற்றி, இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்களை தேசிய இயக்கத்தில் சேர விடாமல், காந்திஜி அவர்களை வெகு தொலைவிலேயே வைத் திருந்தார் என, கட்ஜு தனது கருத்தை தெரிவித்திருந்தார்.
சர்ச்சை கருத்து
அதேபோல், சுபாஷ் சந்திர போஸைப் பற்றி குறிப்பிடும் போது, அவரின் செயல்பாடுகள், தெரிந்தோ, தெரியாமலோ ஜப்பானிய ஏகாதிபத்திய நலன் களை இந்தியாவுக்குள் புகுத்தி விட்டது எனக் கூறியிருந்தார்.
காந்திஜி, நேதாஜியை பிரிட்டன் மற்றும் ஜப்பானிய ஏஜென்டு களாக சித்தரித்ததாகக் கூறி, கட்ஜுவுக்கு எதிராக கடந் தாண்டு மார்ச் 11-ம் தேதி மாநிலங்களவையிலும், மறுநாள் மக்களவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி, கடந்தாண்டு ஜூன் 29-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் கட்ஜு வழக்கு தொடர்ந்தார். ஒரு தனி நபர் என்ற முறையில் தனக்கு கருத்து சுதந்திரம் உள்ளதாகவும், இவ்விஷயத்தில் தனக்கு எதிரான தீர்மானம் நாடாளுமன்ற சட்ட விதிகளுக்கு முரணானது என்றும் கட்ஜு மனுவில் கூறியிருந்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் பி.சி.கோஸ், யூ.யூ.லலித் ஆகியோர் கொண்ட பெஞ்ச் இம்மனுவை விசாரித்து நேற்று தீர்ப்பளித்தது. அதில், தகுதி அடிப்படையில் கட்ஜுவின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT