Published : 25 Jan 2023 12:56 PM
Last Updated : 25 Jan 2023 12:56 PM

லக்கிம்பூர் கேரி வழக்கு | ஆஷிஸ் மிஸ்ராவுக்கு இடைகால ஜாமீன் - உச்சநீதிமன்றம் உத்தரவு

கோப்புப்படம்

புதுடெல்லி: கடந்த 2021ம் ஆண்டு நடந்த லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு 8 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர் உத்தர பிரதேசத்தில் தங்க தடைவித்துள்ளது.

தனக்கு ஜாமீன் வழங்க மறுத்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஆஷிஸ் மிஸ்ரா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கை நீதிபதிகள் சூர்யகாந்த், ஜேகே மகேஸ்வரி அடங்கிய அமர்வு விசாரித்தது. கடந்த வாரத்தில் நடந்த விசாரணையின் போது, ஆஷிஸ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கினால் அது சமுதாயத்திற்கு தவறான செய்தியாகிவிடும் என்று உச்ச நீதிமன்றத்தில் கூறிய உத்தர பிரதேச அரசு, ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தது. அதற்கு ஆட்சேபம் தெரிவித்த மிஸ்ரா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, "தனது கட்சிக்காரர் ஓர் ஆண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு நடைபெறும் விதத்தைப் பார்க்கும்போது இன்னும் ஏழு எட்டு ஆண்டுகள் கூட வழக்கு நடக்கலாம். எனவே, தனது கட்சிக்காரருக்கு ஜாமின் வழங்க வேண்டும்." என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்கள் முடிந்ததை அடுத்து நீதிமன்றம் தீர்ப்பினை ஒத்திவைத்தது.

இந்தநிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ஆஷிஸ் மிஷ்ராவுக்கு 8 வார காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், ''ஜாமீன் காலத்தில் ஆஷிஸ் மிஸ்ரா உத்தர பிரதேசத்திலோ, டெல்லியிலோ தங்கக்கூடாது. அவர் ஒருவார காலத்திற்குள் உத்தர பிரதேசத்தில் இருந்து வெளியேற வேண்டும். ஜாமீன் காலத்தில், ஆஷிஸ் மிஸ்ராவோ அவரது குடும்பத்தினரோ சாட்சிகளை கலைக்க முயன்றால் அவரது ஜாமீன் ரத்து செய்யப்படும்.'' என்று தெரிவித்தனர்.

லக்கிம்பூர் கேரி வன்முறை... கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி காலை வேளையில், உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா உடன் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவரின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தனர். அவர்கள் செல்லும் வழியில் கேரி என்ற கிராமத்தில் மத்திய அமைச்சருக்கு கருப்புக் கொடி காட்ட விவசாயிகள் திரண்டிருந்தனர். அப்போது விசாயிகள் கூட்டத்துக்குள் அமைச்சரின் மகன் வாகனம் புகுந்ததில் 4 விவசாயிகள் உடல் நசுங்கி இறந்தனர். அதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கும் பாஜக ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தினர். மொத்தமாக இந்தச் சம்பவங்களில் 8 பேர் வரை உயிரிழந்தனர்.

அமைச்சரின் மகன் இருந்ததாகக் கூறப்படும் கார், விவசாயிகள் மீது ஏறிச் செல்லும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. எனினும், இந்தச் சம்பவத்தில் தனது மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறி வந்தார். இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஆஷிஸ் மிஸ்ரா உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டதுடன் சிறப்பு புலனாய்வு குழுவினர் வழக்கின் விசாரணையை மேற்கொண்டு வந்தனர். சிறப்பு புலனாய்வுப் பிரிவு தாக்கல் செய்த அந்த 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் 'லக்கிம்பூர் கேரி சம்பவம் விபத்து கிடையாது. நன்கு திட்டமிடப்பட்ட சதித்திட்டத்தால் செய்யப்பட்ட கொலை' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x