மின்னணு பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க ரொக்கப் பரிசு: மத்திய அரசு அறிவிப்பு

மின்னணு பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க ரொக்கப் பரிசு: மத்திய அரசு அறிவிப்பு
Updated on
1 min read

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனை முறையை ஊக்குவிக்கும் விதமாக வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோருக்கு ரூ.340 கோடி அளவிலான தினசரி, வாராந்திர ரொக்கப் பரிசை நிதி ஆயோக் தலைமைச் செயலதிகாரி அமிதாப் காந்த் அறிவித்துள்ளார்.

இது கிறிஸ்துமஸ் பண்டிகை நாள் முதல் தொடங்கி ஏப்ரல் 14-ம் தேதி வரை நீடிக்கும்.

இதற்காக ‘லக்கி கிரஹக் யோஜனா’ மற்றும் ‘டிஜி தன் வியாபார் யோஜனா’ ஆகிய பரிசளிப்புத் திட்டங்களை நிதி ஆயோக் தலைமைச் செயலதிகாரி அமிதாப் காந்த் அறிவித்தார். இந்த இரண்டு திட்டங்களும் ரூ.50 முதல் ரூ.3,000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, அதாவது அனைத்துப் பிரிவினரும் டிஜிட்டல் பரிவர்த்தனை முறைக்குள் கொண்டு வருவதற்காக சிறிய தொகைக்கு கூட பரிசளிப்புத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

இதனை கிறிஸ்துமஸ் பரிசு என்று அழைக்கும் அமிதாப் காந்த், டிசம்பர் 25 முதல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதி வரை இந்தப் பரிசளிப்புத் திட்டம் நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய நேஷனல் பேமண்ட் கமிஷன் டிசம்பர் 15 முதல் 100 நாட்களுக்கான ரூ.1000 பரிசுத் தொகை வென்ற 15,000 பேர்களை அறிவிக்கும். அதே போல் 7,000 நுகர்வோர் மற்றும் வர்த்தகர்களுக்கு வாராந்திர பரிசு அறிவிக்கப்படும்.

இதில் P2P and B2B மற்றும் கிரெடிட் கார்டுகள், இ-வாலட் பரிவர்த்தனைகள் அடங்காது.

“உத்தேசமாக 5% இந்தியர்களே டிஜிட்டல் பேமண்ட் முறையைப் பயன்படுத்தி வருகின்றனர். 40 கோடி ஸ்மார்ட் போன்கள் 25 கோடி ஜன் தன் வங்கிக்கணக்குகளுடன் நம்மிடையே மிகப்பெரிய முறைசாரா பொருளாதாரப் பிரிவு உள்ளது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு நவம்பர் 8 முதல் டிசம்பர் 7 வரை பி.ஓ.எஸ். பரிவர்த்தனையில் 95% உயர்வு ஏற்பட்டுள்ளது. ரூபே கார்டு மூலம் பணப்பரிவர்த்தனைகள் 316%, மற்றும் இ-வாலட் பரிவர்த்தனை முறை 271% அதிகரித்துள்ளன” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in