Published : 10 Jan 2023 08:21 AM
Last Updated : 10 Jan 2023 08:21 AM

பஞ்சாபில் 10, பிளஸ் 2 தேர்வில் சாதனை - மாணவிகளை விமானத்தில் சுற்றுலா அனுப்பிய பள்ளி முதல்வர்

பெரோஸ்பூர்: பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர் மாவட்டத்தின் ஜிரா பகுதியில் உள்ளது சாகித் குருதாஸ் ராம் நினைவு அரசு பள்ளி. இங்கு கடந்த 2019-ம் ஆண்டு ஷர்மா என்பவர் முதல்வராக வந்தார்.

அப்போது அந்த பள்ளி மாவட்ட அளவில் உள்ள 56 பள்ளிகளில் 48-வது இடத்தில் இருந்தது. கடந்த 12 ஆண்டுகளாக இந்த பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகள் யாரும் தரவரிசை பட்டியலில் இடம் பெறவில்லை.

மாணவிகளை ஊக்குவிக்க, பொது தேர்வு எழுதும் மாணவிகள் தரவரிசை பட்டியலில் இடம் பிடித்தால் அவர்களின் ஆசையை நிறைவேற்றுவதாக முதல்வர் ஷர்மா அறிவித்தார். விமானத்தில் பறக்க வேண்டும் என மாணவிகள் ஆசைப்பட்டனர்.

இந்தியாவுக்குள் எந்த நகருக்கு செல்ல வேண்டுமோ அதன் விமான கட்டணத்தை ஏற்பதாக முதல்வர் ஷர்மா உறுதியளித்தார்.

அதன்படி 10-ம் வகுப்பு மாணவிகள் 2 பேரும், 12-ம் வகுப்பு மாணவிகள் இருவரும் கடந்தாண்டு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தரவரிசை பட்டியலில் இடம் பிடித்தனர். பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகள் பஜன் ப்ரீத் கவுர் மற்றும் சிம்ரன்ஜீத் கவுர் ஆகியோர் கோவாவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற இந்திய சர்வதேச புதுமை கண்டுபிடிப்பு கண்காட்சிக்கு சென்றனர். அவர்கள் அமிர்தசரஸ் நகரிலிருந்து கோவா சென்ற விமான டிக்கெட் செலவை பள்ளி முதல்வர் ஷர்மா ஏற்றார்.

10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த 2 மாணவிகள் அமிர்தசரஸில் இருந்து டெல்லிக்கு இந்த மாத இறுதியில் சுற்றுலா செல்லவுள்ளனர். அவர்களின் விமான டிக்கெட் செலவையும் முதல்வர் சர்மா ஏற்றுள்ளார்.

இதனால் அந்த 4 ஏழை மாணவிகளின் பெற்றோரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x