Published : 10 Jul 2014 01:20 PM
Last Updated : 10 Jul 2014 01:20 PM
2022-ல் அனைவருக்கும் சொந்த வீடு கிடைக்க வழிவகுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
2014 - 15ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, "2022-ல் அனைவருக்கும் சொந்த வீடு கிடைக்க அரசு உறுதி செய்துள்ளது. வீட்டு கடனிற்கு கூடுதல் வரி சலுகை அளிப்பதன் மூலம் அரசு இதனை செயல்படுத்தும். இது மக்களை, முக்கியமாக இளைஞர்களை சொந்த வீடு வாங்க ஊக்குவிக்கும்.
தேசிய வீட்டு வசதி வங்கியில் குறைந்த விலையில் கட்டக்கூடிய மலிவு வீடுகள் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம் நகரத்தில் உள்ள ஏழை மக்கள் அனைவரும் வீடு கட்டும் வசதிவாய்ப்பு ஏற்படுத்தப்படும். இதற்காக 2014-15 மத்திய பட்ஜெட்டில் ரூ.4,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனை மேலும் வலுபடுத்த இந்த துறையில் அந்நிய முதலீட்டை எளிமையாக்கும் வழிகளை அரசு மேற்கொண்டுள்ளது. வேறு ஏதும் வழிகள் இருப்பின், அதனை ஆய்வு செய்யவும் அரசு தயாராக உள்ளது.
மேலும், குடிசை பகுதி மேம்பாட்டினை நிறுவன சமூக பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தனியார் நிறுவனங்களின் பங்கை அதிகரிக்கும் நோக்கத்தோடு செய்யப்பட்டுள்ளது.
கிராம வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கிராம வீட்டுவசதி கடன் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பெரும்பாலான கிராம மக்கள் பயன் பெற்றுள்ளனர். இதனை அடுத்து, நாட்டின் கிராமபுர வீட்டு வசதிக்கு ஆதரவாக 2014-15ஆம் ஆண்டிற்கு தேசிய வீட்டு வசதி வங்கிக்கு ரூ.8,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT