Published : 06 Jan 2023 12:40 PM
Last Updated : 06 Jan 2023 12:40 PM

மத்தியப் பிரதேசம் | கோயில் கோபுரத்தில் மோதி பயிற்சி விமானம் விபத்து: விமானி உயிரிழப்பு

ரேவா: மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் பயிற்சி விமானம் ஒன்று கோயில் கோபுரம் மீது மோதி விபத்துக்குள்ளானதில், விமானத்தை ஓட்டிய விமானி உயிரிழந்தார். பயிற்சி விமானி படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து சோர்ஹட்டா காவல்நிலைய அதிகாரி ஜே.பி. பாடீல் கூறுகையில்,"பயிற்சி விமானம் ஒன்று சோர்ஹட்டா விமானதளத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது கோயில் கோபுரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானி விஷால் யாதவ் (30) உயிரிழந்தார். பயிற்சி விமானி அன்ஷுல் யாதவ் படுகாயங்களுடன் சஞ்சய் காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.

சம்பவம் குறித்து அறிந்ததும், ரேவா மாவட்ட ஆட்சியர் மனோஜ் புஷ்ப், காவல் கண்காணிப்பாளர் நன்வ்நீத் பாசின் ஆகியோர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தனர். விபத்து குறித்த கூடுதல் தகவல்களுக்காக காத்திருப்பதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x