Published : 03 Jan 2023 05:06 AM
Last Updated : 03 Jan 2023 05:06 AM

நாக்பூரில் இன்று இந்திய அறிவியல் மாநாட்டை தொடங்கி வைக்கிறார் பிரதமர்

நாக்பூர்: நாக்பூரில் இன்று இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி, காணொலி மூலம் தொடங்கி வைத்து உரையாற்றவுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இந்த ஆண்டுக்கான இந்திய அறிவியல் மாநாடு நாளை தொடங்கவுள்ளது.

ஆண்டுதோறும் நாட்டில் உள்ள முன்னணி விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் பங்கேற்கும் இந்திய அறிவியல் மாநாடு நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த மாநாடு நடத்தப்படவில்லை. இந்நிலையில், நாக்பூரில் இன்று (ஜனவரி 3) 108-வது இந்திய அறி
வியல் மாநாடு தொடங்கவுள்ளது. இந்த மாநாடு ஜனவரி 7 -ம் தேதி வரை 5 நாள்கள் நடைபெற உள்ளது. மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

'பெண்களுக்கு அதிகாரமளித்தலுடன் நிலையான வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்' என்ற கருத்தை அடிப்படையாக வைத்து, இந்த மாநாடு நடைபெற உள்ளது. நிலையான வளர்ச்சி, பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், இவற்றை அடைவதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

மாநாட்டில் நாடு முழுவதிலும் உள்ள அறிவியல் ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள், இன்ஸ்டிடியூட்டுகளில் இருந்து விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். மாநாட்டையொட்டி சிறார் அறிவியல் மாநாடும் நடைபெறவுள்ளது. தொடக்க விழா நிகழ்ச்சியில் மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஜிதேந்திர சிங், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x