Published : 31 Dec 2022 01:21 PM
Last Updated : 31 Dec 2022 01:21 PM

காஷ்மீர் 2022 | 93 என்கவுன்டர்களில் 172 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: காவல்துறை தகவல்

காஷ்மீர் ஏடிஜிபி விஜய் குமார்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் 2022ல் 172 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக காஷ்மீர் ஏடிஜிபி விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் அதிகம் நிகழும் பகுதியாக காஷ்மீர் இருந்து வருகிறது. பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். 2022 இன்றுடன் முடிவடைய உள்ளதால், இந்த ஆண்டில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விவரங்களை காஷ்மீர் காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு மொத்தம் 93 என்கவுன்டர்கள் நிகழ்ந்துள்ளன. இதில், 42 வெளிநாட்டு பயங்கரவாதிகள் உள்பட 172 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த பயங்கரவாதிகள் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 108 பேர் லஷ்கர் இ தொய்பா அமைப்பையும், 35 பேர் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பையும் சேர்ந்தவர்கள். 22 பேர் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பையும், 4 பேர் அல் பதர் அமைப்பையும், 3 பேர் அன்சர் கஷ்வாதுல் ஹிந்த் என்ற அமைப்பையும் சேர்ந்தவர்கள் என காஷ்மீர் ஏடிஜிபி விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத அமைப்புகளில் இணைபவர்களின் ஆயுள் காலம் கடந்த காலங்களோடு ஒப்பிடும்போது தற்போது மிகப் பெரிய அளவில் குறைந்திருப்பதாகத் தெரிவித்துள்ள விஜய் குமார், இந்த ஆண்டு பயங்கரவாத அமைப்புகளில் புதிதாக இணைந்த 65 பயங்கரவாதிகளில் 58 பேர், அவர்கள் இணைந்த முதல் மாதத்திலேயே கொல்லப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்டார். 2022ல் 360 ஆயுதங்கள் பயங்கரவாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள காஷ்மீர் ஏடிஜிபி விஜய் குமார், இதில் 121 துப்பாக்கிகள் ஏ.கே.ரகத்தைச் சேர்ந்தவை என்றும், 231 கைத்துப்பாக்கிகள் என்றும் அவர் குறிப்பிட்டார். இவைமட்டுமின்றி, வெடிகுண்டுகள், வெடிகுண்டு தயாரிக்கப்பயன்படும் பொருட்கள் உள்ளிட்டவையும் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ''பயங்கரவாதிகளின் தாக்குதலில் பொதுமக்கள் 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 6 பேர் காஷ்மீர் இந்துக்கள். 15 பேர் இஸ்லாமியர்கள். 8 பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் பசித் தர், அதில் வானி எனும் இரண்டு பயங்கரவாதிகளைத் தவிர மற்ற அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர். இந்த இருவர் விரைவில் கொல்லப்படுவார்கள். பயங்கரவாதிகளுடனான தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 26 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். இவர்களில் 14 பேர் ஜம்மு காஷ்மீர் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.'' என்றும் காஷ்மீர் ஏடிஜிபி விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x