Published : 28 Dec 2022 06:34 AM
Last Updated : 28 Dec 2022 06:34 AM

ஓபிசி இடஒதுக்கீடு இல்லாமலேயே உ.பி. உள்ளாட்சி தேர்தலை நடத்த அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு

லக்னோ: இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு(ஓபிசி) இடஒதுக்கீடு இல்லாமலேயே உள்ளாட்சித் தேர்தலை உத்தரபிரதேச அரசு நடத்த வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணை அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.கே. உபாத்யாய், சவுரவ் லாவனியா ஆகியோர்அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பை வழங்கினர்.

அதன்படி, ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு இல்லாமலேயே உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்றும், அதற்கான ஏற்பாடுகளை உ.பி. அரசு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உ.பி. மாநில அரசு, இந்தமாத தொடக்கத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்காக 17 மாநகராட்சிகள், 200 பஞ்சாயத்து ஒன்றியத் தலைவர்கள், 545 நகர பஞ்சாயத்துகளுக்கான தலைவர் பதவிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கி அதற்கான உத்தரவை வெளியிட்டிருந்தது. இதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில், இடஒதுக்கீடு இல்லாமலேயே உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதனால் அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை அறிவிக்காமல் உள்ளாட்சிதேர்தலை நடத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தேவைப்பட்டால், அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உ.பி. அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். அதுவரையில் தேர்தலை நடத்த நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின் பேரில் ஒரு கமிஷன் அமைத்து ஓபிசி இடஒதுக்கீடு குறித்து ஆய்வு நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x