Last Updated : 16 Dec, 2016 09:17 PM

 

Published : 16 Dec 2016 09:17 PM
Last Updated : 16 Dec 2016 09:17 PM

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.21, டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.79 உயர்வு

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி இருக்கின்றன. பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.21 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 1.79 ரூபாய் உயர்த்தப்பட்டிருக்கின்றன.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.68.41க்கும், டீசல் விலை 58.28 ரூபாய்க்கும் விற்கபபடும். புதிய விலை இன்று (டிச.16) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து விலை உயரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தள்ளி வைத்ததாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.

கடந்த டிசம்பர் 1-ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 13 காசுகள் உயர்த்தப்பட டீசல் விலை லிட்டருக்கு 12 காசுகள் குறைக்கப்பட்டது.

ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி மற்றும் 15-ம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாற்றி அமைத்து வருகின்றன. ஆனால் குறிப்பிட்ட தேதியில் விலையை மாற்றியாக வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. சர்வதேச சந்தையில் ஏற்ற இறக்கமான சூழல் இருக்கிறது. சூழலை ஆராய்ந்து வருகிறோம். பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படும் முடிவை சரியான நேரத்தில் எடுப்போம் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைவர் பி.அசோக் கூறியிருந்தார்.

மேலும், சர்வதேச பெட்ரோல் விலை பீப்பாய் ஒன்றிற்கு 57.73 அமெரிக்க டாலர்களிலிருந்து 62.82 டாலர்களாகவும் டீசல் விலை பீப்பாய்க்கு 56.79 டாலர்களிலிருந்து 60.97 டாலர்களாக அதிகரித்ததால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக பொதுத்துறை நிறுவனங்கள் தெரிவித்தன.

“ஏற்கெனவே பணமதிப்பு நீக்க நடவடிக்கை விவகாரம் நாடாளுமன்றத்தை முடக்கி வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வும் சேர்ந்து கொண்டால் பிரச்சினை அதிகரிக்கும் என்பதால் குளிர்கால கூட்டத் தொடர் முடிவடைந்தவுடன் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x