Last Updated : 26 Dec, 2022 07:56 AM

 

Published : 26 Dec 2022 07:56 AM
Last Updated : 26 Dec 2022 07:56 AM

பஞ்சமசாலி லிங்காயத்துகள் இடஒதுக்கீடு கோரி போராடுவதால் பாஜகவுக்கு நெருக்கடி

கோப்புப்படம்

பெங்களூரு: கர்நாடகாவில் கணிசமாக வசிக்கும் லிங்காயத்து வகுப்பினரில் வீரசைவ, பஞ்சமசாலி ஆகிய இரு பெரும் பிரிவுகள் உட்பட 50-க்கும்மேற்பட்ட உட்பிரிவுகள் இருக்கின்றன.

இதில் பெரும்பான்மையாக உள்ள பஞ்சமசாலி லிங்காயத்து வகுப்பினர் தற்போது இட ஒதுக்கீட்டில் 3பி பிரிவில் உள்ளனர். ஆனால் பஞ்சமசாலி வகுப்பினர் தங்களை 2ஏ பிரிவுக்கு மாற்றி, 15% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என நீண்ட காலமாக கோரி வருகின்றனர். அண்மையில் முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்தித்து இது தொடர்பாக மனு அளித்தனர்.

பெலகாவியில் நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ப‌ஞ்சமசாலி மடாதிபதி ஜெயமிருதஞ்சய சுவாமி தலைமையில் நேற்று முன்தினம் சுவர்ண சவுதாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 3 நாட்களாக நடைபெறும் இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இவர்களுக்கு பாஜகவில் உள்ள பஞ்சமசாலி எம்எல்ஏக்கள் பசனகவுடா யத்னால் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாஜக எம்எல்ஏ பசனகவுடா யத்னால், ''பஞ்சமசாலி சமூகத்தை 2ஏ பிரிவில் சேர்க்கக் கோரி 2 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் கர்நாடக அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. எங்கள் சமூகத்தினரின் குரலை புறக்கணிப்பதை ஏற்க முடியாது. எங்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் வருகிற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக‌வை ஆதரிக்க மாட்டோம்'' என்றார். இந்தப் போராட்டத்தால் கர்நாடக பாஜக‌ அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பஞ்சமசாலி வகுப்பினர் தங்களை 2ஏ பிரிவுக்கு மாற்றி, 15% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x