Published : 17 Dec 2022 03:15 PM
Last Updated : 17 Dec 2022 03:15 PM

11 பேர் விடுதலைக்கு எதிரான பில்கிஸ் பானுவின் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

பில்கிஸ் பானு | கோப்புப்படம்

புதுடெல்லி: கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 பேர் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதற்கு எதிராக பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு தொடர்ந்த மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த 2002-ம் குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்முறை சம்பவத்தின்போது, பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். மேலும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 7 பேரும் கொலை செய்யப்பட்டனர்.

தண்டனைக் காலம் முடியும் முன் தங்களை விடுதலை செய்யக் கோரி இக்குற்றத்தில் தொடர்புடைய 11 குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து பரிசீலனை செய்யுமாறு குஜராத் மாநில அரசைக் கேட்டுக்கொண்டது. இதன் அடிப்படையில் குற்றவாளிகள் 11 பேரும் சில மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த மறுசீராய்வு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்து பரிசீலித்து வருவதாகத் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், பில்கிஸ் பானுவின் மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த உத்தரவினை நீதிபதிகள் அஜய் ரஸ்டோகி மற்றும் விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு டிசம்பர் 13-ம் தேதி பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு இன்னும் பதிவேற்றம் செய்யப்படவில்லை. ஆனால், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட விபரம், உச்ச நீதிமன்றத்தின் பதிவாளர் அலுவலகம் மூலமாக பில்கிஸ் பானுவின் வழக்கறிஞர் சோபா குப்தாவிடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பில்கிஸ் பானுவின் வழக்கறிஞருக்கு வெள்ளிக்கிழமை (டிச.16) தேதியிட்டு உச்ச நீதிமன்ற துணைப் பதிவாளரால் அனுப்பப்பட்ட கடிதத்தில், "மேலே குறிப்பிட்டப்பட்ட மனுதாரர் (பில்கிஸ் பானு vs இந்திய யூனியன்) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனு, நீதிமன்றத்தால் டிசம்பர் 13, 2022-ல் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதனை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

முன்னதாக, உச்ச நீதிமன்றத்தில், “இவர்கள் 11 பேரும் 15 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பதாலும் நன்னடத்தை காரணமாகவும் விடுதலை செய்யப்பட்டனர். 1992-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தண்டனைக் குறைப்பு கொள்கையின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று குஜராத் அரசு விளக்கம் அளித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x