Published : 15 Dec 2022 03:27 PM
Last Updated : 15 Dec 2022 03:27 PM

பெட்ரோல், டீசல் விலை | தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களை குறை கூறிய மத்திய அரசு - எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

நாடாளுமன்றத்தில் ஹர்தீப் சிங் புரி விளக்கம்

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்கள் குறைக்கவில்லை என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, இது குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்திப் சிங் புரி விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது: “நவம்பர் 2020-க்கும், நவம்பர் 2022-க்கும் இடைப்பட்ட காலத்தில் கச்சா எண்ணெய் விலை 102 சதவீதம் உயர்ந்துள்ளது. 2020 நவம்பரில் 43.34 அமெரிக்க டாலராக ஆக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 2022 நவம்பரில் 87.55 அமெரிக்க டாலராக உயர்ந்தது. எனினும், இந்தியாவில் பெட்ரோல் விலையில் 18.95 சதவீதமும், டீசல் விலையில் 26.50 சதவீதமும் மட்டுமே உயர்த்தப்பட்டன.

இதன் காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை சந்தித்துள்ளன. IOCL, BPCL, HPCL ஆகிய 3 இந்திய எண்ணெய் நிறுவனங்களும் 2021-22 நிதி ஆண்டில் வரிக்கு முந்தைய லாபமாக ரூ.28,360 கோடி ஈட்டின. ஆனால், 2022-23 நிதி ஆண்டில் இந்த 3 நிறுவனங்கள் சந்தித்த இழப்பு ரூ.27,276 கோடி.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்த போதிலும், மத்திய அரசு நவம்பர் 21, 2021 மற்றும் மே 22, 2022 ஆகிய தேதிகளில் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது. இதன் காரணமாக பெட்ரோல் விலையில் ரூ.13 குறைக்கப்பட்டது; டீசல் விலையில் ரூ.16 குறைக்கப்பட்டது.

மத்திய அரசு கலால் வரியை குறைத்ததை அடுத்து, பல்வேறு மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை குறைத்தன. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை கணிசமாகக் குறைந்தது. எனினும், பாஜக ஆட்சியில் இல்லாத 6 மாநில அரசுகள் இந்த மதிப்புக் கூட்டு வரியை குறைக்கப்படவில்லை. தமிழகம், மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கேரளா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் மதிப்புக் கூட்டு வரியை குறைக்காததால் இந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக அமளியில் ஈடுபடும் எதிர்க்கட்சி எம்.பிக்கள், தங்கள் மாநிலங்களில் வாட் வரியை குறைக்க மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதன் காரணமாக வாட் வரி குறைக்கப்பட்டால் அந்த மாநில மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள்” என்று தெரிவித்தார். அமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x