Published : 15 Dec 2022 04:57 AM
Last Updated : 15 Dec 2022 04:57 AM

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உளவு பார்த்து வந்த இளைஞர் சூரத்தில் கைது

தீபக் சாலுங்கே

சூரத்: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உளவு பார்த்ததாக சூரத்தைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் நேற்று கைது செய்தனர். பெண் பெயரில் பழகிய இருவரிடம் முக்கியமான ராணுவ தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் உளவு பார்த்து தகவல்களை தந்து வருவதாக மகாராஷ்டிரா மாநிலம் புனேவிலுள்ள தெற்கு கமாண்ட் ராணுவப் பிரிவைச் சேர்ந்த ராணுவ உளவுப் பிரிவு கண்டறிந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து ராணுவ உளவுப் பிரிவு அதிகாரிகள் சந்தேகத்துக்குரிய அந்த நபரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதில் சில ஆதாரங்கள் கிடைத்தன

இதையடுத்து சூரத் பகுதியைச் சேர்ந்த தீபக் சாலுங்கே என்பவரை சூரத் சிட்டி கிரைம் பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், இவர் வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் மூலம் ஐஎஸ்ஐ அமைப்பைச் சேர்ந்த ஹமீது, காஷிப் ஆகியோருக்கு நாட்டின் முக்கிய தகவல்களை பகிர்ந்து வந்தது தெரிய வந்துள்ளது.

தீபக் சாலுங்கேவிடம், தன்னை ஒரு பெண் என்றும் பெயர் பூஜா சர்மா என்றும் கூறி வாட்ஸ்-அப், ஃபேஸ்புக்கில் அறிமுகமான ஹமீது, காஷிப் ஆகியோர் தகவல்களைப் பெற்றுள்ளனர். மேலும் தகவல்களைத் தருவதற்கு கணிசமான பணம் தருவதாகவும் தீபக்கிடம், அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்.

சூரத்திலுள்ள ராணுவப் படைகள் தொடர்பான விவரங்களைத் தருமாறு தீபக் சாலுங்கேவிடம் கேட்டுள்ளனர். இந்தத் தகவல்களை வாட்ஸ்-அப் மூலம் தருமாறும்அவர்கள் கூறியுள்ளனர். மேலும் அப்பகுதியிலுள்ள பல்வேறு ராணுவப் படைகளின் விவரங்கள், அலுவலகங்கள், பயிற்சி வளாகங்கள் போன்ற தகவல்களையும் அவர்கள் கேட்டுள்ளனர்.

தீபக் சாலுங்கே, சூரத்திலுள்ள ஒரு பகுதியில் தையல் கடையை சாய் பேஷன் என்ற பெயரில் 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை நடத்தி வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் கரோனா பெருந்தொற்று காலத்தில், தொழில் நஷ்டம் அடைந்ததால் கடையை மூடிவிட்டார். இதைத் தொடர்ந்து பணப் பரிவர்த்தனை தொழிலை தொடங்கியுள்ளார்.

பின்னர் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கடையை பெயரளவுக்குத் திறந்து வைத்துவிட்டு உளவு பார்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சூரத், புனேவிலுள்ள ராணுவ அலுவலகங்கள், பயிற்சி வளா கங்கள் தொடர்பாக அவர் முக்கியத் தகவல்களை ஐஎஸ்ஐ அமைப்பினருக்குத் தந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. அவரது செல்போனிலிருந்து ராணுவ அமைப்புகள் தொடர்பான புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் எடுத்துள்ளனர். இதுதொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x