Last Updated : 13 Dec, 2022 08:22 PM

2  

Published : 13 Dec 2022 08:22 PM
Last Updated : 13 Dec 2022 08:22 PM

‘மத்திய பல்கலை.களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான 3,011 பேராசிரியப் பதவிகள் நிரப்பப்படவில்லை’

புதுடெல்லி: மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர்களின் 3011 பதவிகள் நிரப்பப்படவில்லை. விழுப்புரம் எம்.பி டி.ரவிகுமார் மக்களவையில் எழுப்பியக் கேள்விக்கான பதிலாக இந்த தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து டி.ரவிக்குமார் எம்.பி. மக்களவையில் எழுப்பிய கேள்வியில், 'மத்திய பல்கலைக்கழகங்களில் 33 சதவீத பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்பது அரசுக்கு தெரியுமா? இதனால் கல்வித் தரம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது அரசுக்கு தெரியுமா? அதன் விவரங்களையும் காரணங்களையும் தெரிவிக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன? குறிப்பாக, உயர் கல்வித் துறையில் எஸ்.சி., பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு காலியாக உள்ள பின்னடைவு பணியிடங்களை நிரப்புவதற்கு எடுக்கபட்ட நடவடிக்கை என்ன?' எனக் கேட்டிருந்தார்.

இவரது கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்தர் பிரதான் அளித்த பதிலின் புள்ளிவிவரம்: நாட்டில் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் 18,956 பதவிகள் நிரப்பப்பட்டுள்ளன. 6,180 பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன. அந்தப் பதவிகளை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது’ என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்சி பிரிவினருக்கென ரிசர்வ் செய்யப்பட்ட 307 பேராசிரியர் பதவிகளில் 231, 620 இணைப் பேராசிரியர் பதவிகளில் 401, 1357 உதவிப் பேராசிரியர் பதவிகளில் 276 ஆகியன நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இதுபோலவே, எஸ்டி பிரிவினருக்கான 123 பேராசிரியர், 232 இணைப் பேராசிரியர் மற்றும் 188 உதவிப் பேராசிரியர் பதவிகள் காலியாக உள்ளன. ஓபிசி பிரிவினருக்கு 367 பேராசிரியர் பதவிகளில் 311 பதவிகளும்; 752 இணைப்பேராசிரியர் பதவிகளில் 576, 2332 உதவிப் பேராசிரியர் பதவிகளில் 672 நிரப்பப்படவில்லை.

ஐஐடிகளில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கென ஒதுக்கப்பட்ட 11170 பேராசிரியர் பதவிகளில் 4502 பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன. ஐஐஎம் நிறுவனங்களில் எஸ்சி பிரிவினருக்கு ரிசர்வ் செய்யப்பட்ட 97 பதவிகளில் 53 இடங்களும் எஸ்டி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 40 பதவிகளில் 34 இடங்கள் நிரப்பப்படவில்லை. ஓபிசி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 184 இடங்களில் 98 இடங்கள் நிரப்பப்படவில்லை என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

இது குறித்து, ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் எம்பி ரவிகுமார் கூறும்போது, ‘எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூகங்களைச் சேர்ந்த தகுதி வாய்ந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கும்போது ஒன்றிய அரசு இவ்வளவு இடங்களை நிரப்பாமல் வைத்துள்ளது. இது, பாஜக அரசு சமூக நீதியை ஒழித்துக் கட்ட முயற்சிப்பதையே காட்டுகிறது’ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x