Published : 12 Dec 2022 06:43 PM
Last Updated : 12 Dec 2022 06:43 PM

ரூ.2,000 நோட்டுகளை தடை செய்க: மாநிலங்களவையில் சுஷில் மோடி வலியுறுத்தல்

சுஷில் மோடி

புதுடெல்லி: 2,000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், பிஹார் முன்னாள் துணை முதல்வருமான சுஷில் மோடி திங்கள்கிழமை மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் அவர் பேசியதாவது: "2016-ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது ரூ.500 மற்றும் ரூ.1,000 மதிப்புள்ள பணத்தாள்களுக்கு மாற்றாக ரூ.2,000 மதிப்புள்ள பணத்தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ரூ.2,000 மதிப்புள்ள பணத்தாள்களின் புழக்கத்தால் ஏற்பட்ட பல்வேறு சவால்களைக் கருத்தில் கொண்டு கடந்த 3 வருடங்களாக அவற்றை அச்சிடுவது நிறுத்தப்பட்டுள்ளது. உயர் மதிப்புள்ள இந்த பணத்தாள்கள் பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிக்கவும், போதைப் பொருட்களைக் கடத்தவும், கருப்புப் பண பரிமாற்றத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பொருளாதாரத்தில் உயர்ந்த நாடுகளான அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பான் ஆகியவற்றில் 100-க்கும் மேலான மதிப்புள்ள பணத்தாள்கள் அச்சிடப்படுவது கிடையாது. ஐரோப்பிய ஒன்றியம் அச்சிட்டு வந்த 500 யூரோ மதிப்புள்ள பணத்தாள்களை 2018-ல் நிறுத்திவிட்டது. இதேபோல், சிங்கப்பூர் அரசும், USD 10,000 மதிப்புள்ள பணத்தாளை அச்சிடும் பணியை கடந்த 2010ல் நிறுத்திவிட்டது.

உயர் மதிப்புள்ள பணத்தாள்கள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால்தான் இத்தகைய நடவடிக்கைகளை அரசுகள் எடுத்துள்ளன. எனவே, மத்திய அரசு ரூ.2,000 மதிப்புள்ள பணத்தாள்களை தடை செய்வது குறித்து சிந்திக்க வேண்டும். தடையை படிப்படியாக அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் மக்கள் அவற்றை மாற்றிக்கொள்ள வசதியாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x