Published : 10 Dec 2022 02:18 PM
Last Updated : 10 Dec 2022 02:18 PM

ஆபாச வீடியோ பதிவுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் என்னென்ன? - கனிமொழி சோமு கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்

கனிமொழி சோமு எம்.பி. | கோப்புப் படம்.

புதுடெல்லி: “இணையதளங்கள், சமூக வலைதளங்களில் உலா வரும் ஆபாசமான, அநாகரிமான காட்சிகளை, பதிவுகளைத் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?” என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அளித்த பதில்: “இணையதளத்தை பயன்படுத்தும் அனைவருக்கும் சுந்தந்திரமான, பாதுகாப்பான, பொறுப்புள்ள இணையதள பயன்பாட்டை உறுதிப்படுத்துவதுதான் அரசின் கொள்கை.

இணையதளத்தை பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இணையதள வசதிகளும் அதற்கேற்ப வளர்ந்து வருகிறது. இந்த நிலையில், ஆபாச இணையதளங்களையும், அநாகரிக, வக்கிர வலைதளப் பதிவுகளையும், அவர்கள் பார்க்கும் வாய்ப்பும் அதிகமாகி இருக்கிறது. எல்லையற்ற இணையதள பயன்பாடு இந்த வாய்ப்பை மேலும் அதிகமாக்குகிறது.

இணையதளங்களில் ஆபாசப் படங்களை வெளியிடுவதும், சமூக வலைதளங்களில் வக்கிரப் பதிவுகளைப் பதிவிடுவதும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் - 2000-ன்படி மூன்றாண்டுகள் முதல் ஐந்தாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கத் தகுந்த குற்றங்களாகும்.

ஆனால், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் - 1973-ன்படி இத்தகைய குற்றங்களைத் தடுப்பதும், மேல் நடவடிக்கை எடுப்பதும் காவல் துறையின் பொறுப்பாகும். காவல் துறை மாநில அரசின் நிர்வாகத்தின் கீழ் வருவதால், இத்தகைய குற்றங்களைத் தடுக்கும் கடமை மாநில அரசுகளுக்கே உண்டு.

அதேபோல ஆபாச இணையதளங்களைத் தடை செய்யவும், சமூக வலைதளங்களில் அநாகரிக பதிவுகளைப் போடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாநிலஅரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. இந்த விஷயத்தில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உதவும் வகையில் தகவல் தொழில் நுட்பச் சட்டம் - 2021 (டிஜிட்டல் மீடியா வழிகாட்டு நெறிமுறைகள்) அமல்படுத்தப்பட்டது. இதன்படி, மற்றவருடைய உடல் அமைப்பை வெளிப்படுத்தும் படங்கள், ஆபாசப் படங்கள், சிறுவர்களின் மனதை பாதிக்கும் பதிவுகள் போன்றவற்றை இணையதளங்களில் பதிவேற்றுவது குற்றமாகும்.

எந்த ஒரு தனிநபரும் தன் அனுமதியின்றி, தன்னுடைய கண்ணியத்தை பாதிக்கும் வகையில் ஒரு பதிவை மற்றொரு நபரோ, இணையதளமோ போட்டிருப்பதாக புகார் செய்தால் அந்தப் புகாரைப் பெற்ற 24 மணி நேரத்திற்குள் ஆட்சேபனைக்குரிய அந்தப் பதிவை நீக்க வழிவகை செய்யும் அளவுக்கு குறைதீர்க்கும் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

குறைந்தது 50 லட்சம் பதிவு பெற்ற பயனார்களைக் கொண்ட எந்த ஓர் இணையதள நிர்வாகமும், 24 மணிநேரமும் செயல்படும் குறைதீர்ப்பு மையத்தை உருவாக்கி, அதற்கென பிரத்யேக அதிகாரியை நியமிப்பதும், உள்ளூர் காவல் துறை அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதும் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

இதுதவிர மத்திய உள்துறை அமைச்சகம், தேசிய இணையதளக் குற்றம் தொடர்பாக புகாரளிக்க ஒரு போர்ட்டலை (www.cybercrime.gov.in) உருவாக்கியிருப்பதுடன், இதற்கென 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசியையும் அறிமுகம் செய்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க இணையதளக் குற்றத் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் ஆபாசப் படங்களை வெளியிடும் இணையதளங்கள் இன்டர்போல் போலீஸ் உதவியுடன் அவ்வப்போது கண்காணிக்கப்பட்டு தடை செய்யப்படுகிறது. அத்துடன், அத்தகைய இணையதளங்களுக்குள் பயனாளர்கள் நுழைய முடியாத அளவுக்கு நிரந்தரத் தடை ஏற்படுத்தவும் தொழில்நுட்ப ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பள்ளி மானவ, மாணவிகள் பாதுகாப்பாகவும் பயனுள்ள வகையிலும் இணையதளத்தைப் பயன்படுத்துவது பற்றி சி.பி.எஸ்.இ. நிர்வாகத்திலிருந்து அனைத்துப் பள்ளிகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பப்பட்டிருக்கிறது. இதன்படி ஆபாச இணையதளங்களுக்குள் மாணவர்கள் நுழைய முடியாதபடி தொழில்நுட்பத் தடைகளை நிரந்தரமாக நிறுவ பள்ளி நிர்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இது தவிர, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு பாதுகாப்பான இணையதளப் பயன்பாடு மற்றும் இணையதள குற்றத் தடுப்பு பற்றி பயிற்சி அளிக்கும் திட்டத்தை ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது.

குழந்தைகள் தொடர்பான ஆபாசப் பதிவேற்றங்கள் நடந்தால் அதுபற்றி தகவல் பரிமாறவும், தொடர் நடவடிக்கை எடுக்கவும் இந்திய தேசிய குற்ற ஆவணக் காப்பகமும், அமெரிக்காவில் உள்ள காணாமல் போன மற்றும் சீரழிவுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கான தேசிய மையமும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. அவர்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன“ இவ்வாறு அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x