Published : 08 Dec 2022 05:44 AM
Last Updated : 08 Dec 2022 05:44 AM

உணவு தானிய மானியத்துக்கான செலவு ரூ.2.7 லட்சம் கோடியாக உயரும்

புதுடெல்லி: கரோனா காலகட்டத்தில், ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கும் நோக்கில் மத்திய அரசு கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தைக் கொண்டுவந்தது.

இந்தத் திட்டத்தின் கீழ், குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. மக்களின் தேவை கருதி இந்தத் திட்டம் இவ்வாண்டு டிசம்பர் வரையில் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், உணவுதானிய மானியத்துக்காக மத்திய அரசு செலவிடும் தொகை பட்ஜெட்டில் திட்டமிட்டதைவிட 30 சதவீதம் அதிகரிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பட்ஜெட்டில் உணவுதானிய மானியத்துக்கு ரூ.2.07 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், டிசம்பர் வரையில் திட்டம் நீட்டிக்கப்பட்டதால், உணவுதானிய மானியத்துக்காக மத்திய அரசு செலவிடும் தொகை ரூ.2.7 லட்சம் கோடியாக உயரும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை இந்தத் திட்டம் 2023 மார்ச் வரையில் நீட்டிக்கப்பட்டால், உணவுதானிய மானியத்துக்கான மத்திய அரசின் செலவு ரூ.3.1 லட்சம் கோடியாக உயரும் என்று கூறப்படுகிறது. 2022-23 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தொகை ரூ.39.4 லட்சம் கோடி ஆகும். பட்ஜெட்டில் உணவுதானிய மானியத்துக்கு ஒதுக்கப்பட்டதைவிடவும் கூடுதலாக செலவிடப்படுவதால், நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x