Published : 16 Dec 2016 03:04 PM
Last Updated : 16 Dec 2016 03:04 PM
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தள்ளி வைத்துள்ளன.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.26 என்றும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.78 என்றும் உயர்த்தப்படுவதாக எடுத்த முடிவை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் தள்ளி வைத்துள்ளன.
சர்வதேச பெட்ரோல் விலை பீப்பாய் ஒன்றிற்கு 57.73 அமெரிக்க டாலர்களிலிருந்து 62.82 டாலர்களாகவும் டீசல் விலை பீப்பாய்க்கு 56.79 டாலர்களிலிருந்து 60.97 டாலர்களாக அதிகரித்ததால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக பொதுத்துறை நிறுவனங்கள் தெரிவித்தன.
உண்மையில் வாட் வரியையும் சேர்த்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.90 என்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.10 என்றும் உயர வாய்ப்புள்ளது.
கடந்த டிசம்பர் 1-ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 13 காசுகள் உயர்த்தப்பட டீசல் விலை லிட்டருக்கு 12 காசுகள் குறைக்கப்பட்டது.
பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படும் முடிவை சரியான நேரத்தில் எடுப்போம் என்று ஐஓசி சேர்மன் பி.அசோக் கூறுகிறார். ஆனால் தொழிற்துறையினர் சிலர், “ஏற்கெனவே பணமதிப்பு நீக்க நடவடிக்கை விவகாரம் நாடாளுமன்றத்தை முடக்கி வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வும் சேர்ந்து கொண்டால் பிரச்சினை அதிகரிக்கும் என்பதால் குளிர்கால கூட்டத் தொடர் இன்று முடிவடைந்தவுடன் உடனேயே பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படலாம்” என்று கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT