Last Updated : 24 Dec, 2016 11:02 AM

 

Published : 24 Dec 2016 11:02 AM
Last Updated : 24 Dec 2016 11:02 AM

கேரளாவில் சோலார் பேனல் ஊழல் விவகாரம் விசாரணை கமிஷன் முன்பு உம்மன் சாண்டி வாக்குமூலம்

சூரிய மின் தகடு (சோலார் பேனல்) ஊழல் விவகாரம் தொடர்பாக கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, விசாரணை கமிஷன் முன்பு நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

கேரளாவில் சூரிய மின் தகடுகள் ஊழல் குறித்து விசாரிக்க, உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷனை, 2013-ம் ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி கேரள மாநில அரசு அமைத்தது.

மோசடியில் ஈடுபட்ட சரிதா நாயர் மற்றும் பிஜு ராதா கிருஷ்ணன் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீதி மன்றம் உறுதிசெய்து சிறை தண்டனை அளித்த நிலையில், இம்மோசடியில் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் உதவியாளர்கள் உள்ளிட்டோ ருக்கு உள்ள தொடர்பு குறித்து சிவராஜன் கமிஷன் விசாரித்து வருகிறது.

இதுதொடர்பாக, நேரில் ஆஜராகி விவரங்களைத் தெரிவிக்குமாறு, கேரள முன்னாள் முதல்வர் உம்மண் சாண்டியை, சிவராஜன் கமிஷன் கேட்டுக்கொண்டது. இதைத் தொடர்ந்து, நேற்று திருவனந்த புரத்தில் சிவராஜன் கமிஷன் முன்பாக உம்மன் சாண்டி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

அப்போது, தனக்கு எதிராகவும், தனது அலுவலகப் பணியாளர்களுக்கு எதிராகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என, நீதிபதியிடம் உம்மன் சாண்டி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x