Published : 21 Nov 2022 12:56 PM
Last Updated : 21 Nov 2022 12:56 PM

'மனிதநேயத்தின் அடையாளம்...' - ராகுல் காந்தியை பாராட்டிய சஞ்சய் ராவத்

சஞ்சய் ராவத் | கோப்புப்படம்

புதுடெல்லி: தன்னுடைய அரசியல் சகாவின் மீது ராகுல் காந்தி அக்கறை கொண்டிருப்பது அவரின் மனித நேயத்தைக் காட்டுவதாக சிவ சேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா அணியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத். பணமோசடி குற்றச்சாட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இவர், நவ.9 ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் இவர் திங்கள் கிழமை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவொன்றில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தியை பாராட்டியுள்ளார்.

தனது பதிவில், " தன்னுடை இந்திய ஒற்றுமை யாத்திரையின் இடையறாத பணிகளுக்கு மத்தியில் ராகுல் ஜி இரவு என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னுடைய உடல் நலன் குறித்து விசாரித்தார். மேலும் நாங்கள் அனைவரும் உங்களைப் பற்றி மிகவும் கவலை அடைந்தோம் என்று தெரிவித்தார். அரசியல் சகா ஒருவர் பொய்யாக புனையப்பட்ட வழக்கில் 110 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்ததற்கு வருந்துவது மனிதம் உள்ளவர்களால் மட்டுமே முடியும்" என்று மராத்தியில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ஆங்கிலத்தில் நீண்ட பதிவொன்றை பகிர்ந்துள்ளார். அதில், "சில விகாரங்களில் வலுவான முரண்பாடுகள் இருக்கும் நிலையிலும், உங்கள் அரசியல் சகாவின் நலன் குறித்து அக்கறையுடன் விசாரிப்பது மனிதநேயத்தின் வெளிப்பாடாகும். அரசியல் காழ்ப்புணர்ச்சி உள்ள இந்த காலத்தில் இதுபோன்ற செயல்பாடுகள் மிகவும் அரிதான ஒன்று. ராகுல் ஜி தனது யாத்திரையில் அன்பு மற்றும் ஒற்றுமையில் கவனம் செலுத்துகிறார். அதனால் அது அதிக கவனம் பெறுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் நிகழ்ந்து வரும் இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது, வீர சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த கருத்தால் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணிக்கு இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் சஞ்சய் ராவத்தின் கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

முன்னதாக, இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது, கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, சாவர்க்கர் சிறையில் இருக்கும் போது ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து விடுதலை வாங்கினார் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்தியின் இந்த கருத்து சிவ சேனாவின் இரண்டு அணிகளிடமும் கோபத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இருக்கும் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா அணிக்கு மிகவும் தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியிருந்தது.

இந்தநிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த உத்தவ் தாக்கரே "நாங்கள் சாவர்க்கர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளோம்'' என்று தெரிவித்திருந்தார். தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்திருந்த சிவ சேனாவின் சஞ்சய் ராவத், சாவர்க்கர் விவகாரம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. நாங்கள் அவரது சித்தாந்தத்தை நம்புகிறோம். காங்கிரஸ் இந்த நேரத்தில் இந்த விவகாரத்தை எடுத்திருக்கக் கூடாது" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x