Published : 21 Nov 2022 05:57 AM
Last Updated : 21 Nov 2022 05:57 AM

ரூ.22,842 கோடி வங்கி மோசடி: ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை

ரிஷி அகர்வால் | கோப்புப்படம்

புதுடெல்லி: பல்வேறு வங்கிகளில் ரூ.22,842 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனர் ரிஷி அகர்வாலை சிபிஐ கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்தது. இந்நிலையில் தற்போது அவர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேர் மீதும், 19 நிறுவனங்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ உட்பட 28 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம் ரூ.22,842 கோடி கடன் பெற்றது. ஆனால், இந்தக் கடனை முறையாக பயன்படுத்தாமல் மோசடி செய்துள்ளது. இந்நிறுவனத்தின் 2012 முதல் 2017 வரையிலான கணக்குகளை தணிக்கை செய்தபோது இந்த மோசடி வெளியே தெரியவந்தது. இந்த மோசடி தொடர்பாக எஸ்பிஐ 2019 நவம்பர் மாதம் சிபிஐ-யிடம் புகார் அளித்தது.

இரண்டு ஆண்டுகள் கழித்து 2022 செப்டம்பர் மாதம் இந்தப் புகார் தொடர்பாக ரிஷி அகர்வாலையும், இந்த மோசடியில் தொடர்புடைய மற்ற அதிகாரிகளையும் சிபிஐ கைது செய்தது. வங்கிகளிலிருந்து பெற்ற கடனில் ரூ.5,000 கோடியை ரிஷி அகர்வாலும், அவரது கூட்டாளிகளும் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் முதலீடு செய்துள்ளதை கண்டறிந்த சிபிஐ, ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x