Published : 18 Nov 2022 03:28 PM
Last Updated : 18 Nov 2022 03:28 PM

“பயங்கரவாதத்தை எந்த மதத்துடனும் தொடர்புபடுத்தக் கூடாது” - அமித் ஷா

கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

புதுடெல்லி: பயங்கரவாதத்தை எந்த மதத்துடனும் தொடர்புபடுத்தக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி கிடைப்பதைத் தடுக்கும் வகையில் 3-வது அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் இன்றும், நாளையும் (நவ 18, 19) நடைபெறுகிறது. 'பயங்கரவாதத்திற்கு நிதி கூடாது' (No Money for Terrorism) என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதில் பேசிய அமித் ஷா, "பயங்கரவாதத்தை எந்த மதத்துடனும், எந்தக் குழுவுடனும் தொடர்புபடுத்தக் கூடாது.

பயங்கரவாதிகள் நாச வேலைகளைச் செய்ய பல்வேறு வழிகளிலும் முயற்சி செய்கின்றனர். அவர்கள் இளைஞர்களை மூளைச் சலவை செய்து வன்முறையில் ஈடுபடுத்துகின்றனர். தங்களுக்கு தேவையான நிதி ஆதாரத்தை உருவாக்க டார்க் நெட் எனப்படும் இணைய வழியை பயன்படுத்துகின்றனர். இதன் வாயிலாக தங்கள் அடையாளத்தை மறுத்து வன்முறையை விதைக்கின்றனர்.

பயங்கரவாதமே சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி என்பது பயங்கரவாதத்தைவிடவும் அபாயகரமானது. ஏனெனில், பயங்கரவாதத்துக்கான வழியும், முறைகளும் இங்கிருந்துதான் வகுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்யப்படுவது உலக நாடுகளின் பொருளாதாரத்தை வலுவிழக்கச் செய்கிறது. அதேபோல், பயங்கரவாதத்தை ஏதேனும் ஒரு குறிப்பிட்ட மதத்துடன், தேசத்துடன் ஏதேனும் ஒரு குழுவுடன் தொடர்புப்படுத்தக் கூடாது" என்றார்.

நிதியுதவி ஆதாரத்தை வேறுரக்க வேண்டும்: முன்னதாக, மாநாட்டில் துவக்க உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "பயங்கரவாத தாக்குதல் எங்கு நடந்தாலும் கண்டனத்துக்கு உரியதுதான். அதேபோல் பயங்கரவாதம் எங்கு நடந்தாலும் அதன் மீது நடவடிக்கை அவசியமானது.

இந்த உலகம் பயங்கரவாதத்தின் கோர முகத்தை உணரும் முன்னரே இந்தியா அதன் தாக்கத்தை வெகு காலத்திற்கு முன்னர் சந்தித்துவிட்டது. இந்தியாவில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பெயர்களில், வகைகளில் பயங்கரவாதம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான உயிர்களை நாம் பயங்கரவாதத்துக்கு இழந்துள்ளோம். ஆனாலும் நாம் துணிச்சலுடன் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடியுள்ளோம். ஒரே ஒரு தாக்குதல் என்றாலும் அது பயங்கரவாதம்தான். ஒரே ஒரு உயிர்ப்பலி என்றாலும் அது பெரிய இழப்புதான். அதனால் பயங்கரவாதம் வேரறுக்கப்படும் வரை நாம் ஓயக்கூடாது.

பயங்கரவாதத்தின் நீண்ட கால தாக்கம் என்பது ஏழை மக்கள் மீதே பெருமளவில் பிரதிபலிக்கிறது. உள்ளூர் பொருளாதாரத்தை பாதிக்கிறது. எப்போதும் பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கும் பகுதியில் தொழில் முதலீடு செய்ய யாரும் விரும்புவதில்லை. அதனால் அந்தப் பகுதி வாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அதனால் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்யும் வேரைக் கண்டறிந்து ஒழிக்க வேண்டும்" என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x