Published : 17 Nov 2022 01:42 PM
Last Updated : 17 Nov 2022 01:42 PM

'நான் ஒரு முதல்வர்... நாட்டை விட்டு ஓடிவிடுவேனா?' - ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்

ராஞ்சி: "நான் இன்று விசாரணை ஆணையத்தின் சம்மனை எதிர்கொள்வதாய் இருக்கிறேன். நாட்டின் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும்" என்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்தெரிவித்துள்ளார்.

தன் மீதான சட்ட விரோத சுரங்க ஒதுக்கீடு குற்றச்சாட்டு வழக்கில், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு வியாழக்கிழமை ஆஜராவதற்கு முன்னர், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், " நான் ஒரு முதல்வர். நான் அரசியல் சாசன ரீதியிலான பொறுப்பை வகிக்கிறேன். ஆனால் எனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள விதத்தைப் பார்க்கும் போது நான் நாட்டை விட்டு தப்பி ஒடிவிடுவேன் என்று நினைக்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. நாட்டில் தொழிலதிபர்களைத் தவிர அரசியல்வாதிகள் யாரும் ஓடிப்போனதாக தெரியவில்லை.

என்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. ஒரு முதல்வரின் மீது மிகவும் எளிதாக இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை வைக்க முடிகிறது என்று எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. நான் அமலாக்கத்துறைக்கு இன்று ஒரு கடிதம் அனுப்பியுள்ளேன். அதில், ஒட்டுமொத்த மாநிலத்தில் இருந்தும் இரண்டு ஆண்டுகளுக்கு சுரங்கங்களில் இருந்து கிடைத்த மொத்த ராயல்டி தொகையே ரூ.750 கோடி என்பதை தெரிவித்துள்ளேன். பின்னர் எப்படி அவர்கள் ரூ.1,000 கோடி ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டுகிறார்கள். ஜார்க்கண்டின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு இதுவரை மறைமுகமாக சதி நடந்து வந்தது தற்போது அது வெளிப்படையாகத் தெரிகிறது" என்று தெரிவித்தார்.

மேலும் அமலாக்கத்துறைக்கு ஜார்க்கண்ட் முதல்வர் அனுப்பிய கடித்தில், "அமலாக்கத்துறை தனது விசாரணையை எந்த உள்நோக்கமும் இல்லாமல் நேர்மையாகவும், உண்மையாகவும் நடத்தும் என்று நான் நம்புகிறேன். சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் எனது கடமைகளை ஒரு சிறந்த குடிமகனாக தவறாமல் நிறைவேற்றுவேன் என்று நான் உறுதிமொழி எடுத்துள்ளேன். என் மீதான சம்மனுக்கு விளக்கம் அளிக்க நான் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு ஆஜராகிறேன்" என்று தெரிவித்துள்ளார். முதல்வர் ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜராவதைத் தொடர்ந்து ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு பாதுகாப்பு பலப்படுத்ததப்பட்டுள்ளது.

முன்னதாக முதல்வர் ஹேமந்த் சோரன் நவம்பர் 4ஆம் தேதி அலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி இருந்தது. மாநில நிகழ்ச்சிகளை காட்டி அதனை நிராகரித்திருந்த முதல்வர் முடிந்தால் அமலாக்கத்துறை தன்னை கைது செய்யட்டும் என்று தெரிவிருத்திருந்தார்.

சாகேப்கஞ்ச் மாவட்டம் சட்டவிரோத சுரங்கம் தொடர்பான பண மோசடி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951- ஐ மீறியது தொடர்பாக அமலாக்கத்துறை ஜார்க்கண்ட் முதல்வருக்கு சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x