Published : 13 Nov 2022 04:56 AM
Last Updated : 13 Nov 2022 04:56 AM

வேந்தர் பதவியிலிருந்து நீக்கும் அவசர சட்டத்தை ஆளுநருக்கு அனுப்பியது கேரள அரசு

திருவனந்தபுரம்: பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்குவதற்கான அவசர சட்டத்தை ஆளுநரின் ஒப்புதலுக்காக கேரள அரசு நேற்று அனுப்பியது.

கேரளாவில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கூட்டணி அரசுக்கும் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

ஆளுநரின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் பல்கலைக் கழக வேந்தர் பதவியிலிருந்து அவரை நீக்கும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்க மாநில அமைச்சரவை கடந்த புதன்கிழமை முடிவு செய்தது.

இதற்கு எதிர்க்கட்சிகளான காங்கிரஸும் பாஜகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கேரளாவில் பல்கலைக்கழகங்களை கம்யூ னிஸ்ட் மையங்களாக இந்த முடிவு மாற்றிவிடும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்நிலையில் பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்குவதற்கான அவசர சட்டத்தை ஒப்புதல் கோரி ஆளுநர் மாளிகைக்கு கேரள அரசு அனுப்பியுள்ளது. இதனை ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் நேற்று உறுதி செய்தன.

வேந்தர் பதவியில் ஆளுநருக்கு பதிலாக சிறந்த கல்வியாளரை நியமிக்க அவசர சட்டம் வகை செய்வதாக கூறப்படுகிறது. பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமன விவகாரத்தில் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான மோதல் போக்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையில் அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x