Published : 29 Oct 2022 03:57 PM
Last Updated : 29 Oct 2022 03:57 PM

‘கர்நாடகாவில் சில பத்திரிகையாளர்களுக்கு ரொக்கப் பரிசு’ - காங்கிரஸ் புதிய 'PayCM' குற்றச்சாட்டு

கோப்புப் படம்

பெங்களூரு: கர்நாடகாவில் பத்திரிகையாளர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது தொடர்பாக முதல்வர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாக எழுந்த தகவல், அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளியை ஒட்டி ஒரு சில பத்திரிகையாளர்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரை ரொக்கப் பரிசு அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆளும் பாஜக அரசு இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துவரும் சூழலில் காங்கிரஸ் கட்சியோ இதுதொடர்பாக நீதி விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளது.

இதனை ஸ்வீட் பாக்ஸ் ப்ரைப் என்று காங்கிரஸ் கட்சி அழைக்கின்றது. 10-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களுக்கு இவ்வாறாக பரிசு வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், இருவர் அந்தப் பரிசை திருப்பிக் கொடுத்ததாகவும் கூறிய்யுள்ளனர். இது தொடர்பாக கர்நாடக லோக் அயுக்தா போலீஸில் ஊழல் ஒழிப்புக் குழு ஒன்று புகார் அளித்துள்ளது. இன்னொரு பத்திரிகையாளரும் தனக்கு வந்த ஸ்வீட் ஹாம்பரை பிரிந்தபோது அதில் ரூ.1 லட்சம் இருந்ததாகவும், அது குறித்து தான் தனது ஆசிரியர் குழுவில் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

கர்நாடகா காங்கிரஸ் அடுத்தடுத்து பகிர்ந்த ட்வீட்டில், ‘ஆளும் பாஜக அரசு மக்களின் வரிப்பணத்தை விரயம் செய்கிறது? இந்தப் பணம் எங்கிருந்து வந்தது? எவ்வளவு பணம் இவ்வாறாக லஞ்சமாக வழங்கப்பட்டிருக்கிறது? இத்தனை பெருந்தொகையை வழங்க கைமாறாக என்ன பெறப்பட்டது?’ என்று கேள்வி எழுப்பியுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், ரன்தீப் சூரஜ்வாலா ஆகியோர் இது தொடர்பாக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். ரன்தீப் தனது ட்விட்டர் பக்கத்தில், முதல்வர் பொம்மையின் இந்த ஊழல் குற்றச்சாட்டை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த நேர்மையான பத்திரிகையாளர்களை பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியினர் சமூக வலைதளங்கள் 'PayCM - பேசிஎம் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர். பே டிஎம் 'PayTM' என்ற செல்போன் செயலியில் பணப் பரிவர்த்தனை செய்வதுபோல் முதல்வர் பொம்மை செயல்பட்டுள்ளதால் இவ்வாறாக விமர்சிப்பதாகக் கூறினர். கடந்த செப்டம்பர் மாதம், "40% Sarkara" 40 சதவீதம் கமிஷன் பெறும் அரசு என்று கிண்டல் செய்து, க்யூஆர் கோட் போஸ்டர்களை ஒட்டி ஆளுங்கட்சியை விமர்சித்துள்ளது. இந்தப் பிரச்சாரத்தில் இப்போது புதிதாக பத்திரிகையாளர்களுக்கு ரொக்கம் வழங்கிய புகாரும் இணைந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x